Mahatma Gandhi: மகாத்மா காந்தி 75வது நினைவு நாளில் தலைவர்கள் அஞ்சலி
மகாத்மா காந்தியின் 75வது நினைவு நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 75வது நினைவு நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தி அடிகளின் 75வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள காந்தியடிகள் நினைவிடத்தில் பல தலைவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியடிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவரை வணங்குகிறேன், அவருடைய ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன். நம் நாட்டுக்காக சேவை புரிந்து தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
“அவரது தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது. அவை நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்ற வலுவையும் கொடுக்கும்” என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் முதல்வர் மு. க. ஸ்டாலின், ஆளுநர் ஆர். என். ரவி ஆகியோர் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். முதல்வருடன் கலந்துகொண்ட மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோரும் காந்தி அடிகளுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் நாதுராம் கோட்சே என்பவரால் தேசத் தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30ஆம் நாள் சர்வோதய நாளாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மகாத்மாகாந்தி நினைவு தினம்; கூட்டாக மரியாதை செலுத்திய ஆளுநர், முதல்வர்