ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் ரயில்வே அமைச்சரின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என முன்னாள் பிரதமர் தேவகவுடா புகழாரம் சூட்டியுள்ளார்

இந்திய ரயில்வே வரலாற்றில் மிகவும் மோசமான விபத்தில் ஒன்றாக பார்க்கப்படும் ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விபத்துக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இத்தகைய வேதனையான விபத்துக்குப் பொறுப்பேற்காமல் மோடி அரசு எங்கும் ஓடிவிட முடியாது. உடனடியாக ரயில்வே அமைச்சரை ராஜினாமா செய்யப் பிரதமர் வலியுறுத்த வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை ராஜினாமா செய்யச் சொல்லி வலியுறுத்தி வரும் நிலையில், ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் ரயில்வே அமைச்சரின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என முன்னாள் பிரதமர் தேவகவுடா புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒடிசா ரயில் விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரயில்வே அமைச்சர் மேற்கொண்டார். ரயில்வே அமைச்சர் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் பதவி விலக வேண்டும் என கோருவது சரியானது அல்ல.” என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தனது கட்சி அரசியல் ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக்கடலில் உருவாகும் 'Biparjoy' புயல்; இந்த பெயரை வைத்தது எந்த நாடு தெரியுமா?

முன்னதாக, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கிய தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி, தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த முறை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற அக்கட்சியின் குமாராசாமி முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், சிறிது காலங்களிலேயே ஏற்பட்ட அரசியல் குளறுபடிகள் காரணமாக, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இந்த முறை காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளதால், தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.