Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? எங்கு வாங்குவது? யார் வெளியிடுவார்கள்? இது கறுப்புப் பணமா?

குஜராத் மற்றும் இமாசலப்பிரதேச மாநிலங்கள் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் நிலையில், தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கு அரசியல் கட்சிகளுக்கு மேலும் 15 நாட்கள் அவகாசத்தை அரசாணை மூலம் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
 

Gujarat Himachal Pradesh election 2022: What is Electoral Bonds where and how to buy it
Author
First Published Nov 8, 2022, 3:13 PM IST

இந்த அரசாணையின்படி இன்று முதல் கூடுதல் நாட்கள் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நன்கொடையாக பெறப்பட்ட ரூ. 545 கோடியில் 90 சதவீதத்தை பெற்று இருப்பதாக ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. இமாசலப்பிரதேசத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதியும், குஜராத்தில் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது.

தேர்தல் பத்திரங்கள் திட்ட விதிகளின்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (1951 இன் 43) பிரிவு 29A-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களை வெளியிட முடியும். இதற்கான வரைமுறைகள், என்னென்ன விதிகள், எங்கு பத்திரங்களை பெறலாம், என்ன முக மதிப்பில் பெறலாம் என்று பார்க்கலாம்.

மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து இருந்த தகவலில், ''அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களை வெளியிட்ட 15 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதற்கு மேல், பத்திரங்களை யாராவது வாங்கி இருந்தால் அது செல்லுபடியாகாது. அந்தக் கட்சிக்கான நன்கொடையும் செல்லாது. தகுதியான அரசியல் கட்சி தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் தேர்தல் பத்திரங்கள் அன்றே விற்பனைக்கு வரும். 

தேர்தல் என்னமோ 2 மாநிலங்களில்; ஆனா தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் அள்ளிய நன்கொடை ரூ. 545 கோடி!!

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன?
தேர்தல்களின் போது கட்சிகளால் வசூலிக்கப்படும் நன்கொடையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டதுதான் தேர்தல் பத்திரங்கள். தேர்தல் நன்கொடை  வசூலிக்க அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களை வெளியிடலாம். இந்த தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கு இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மட்டுமே. அரசியல் கட்சிகள் இந்த வங்கி மூலம் தேர்தல் பத்திரங்களை வெளியிடும். கறுப்புப் பணத்தை தடுப்பதற்கு என்று இந்த நடைமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நன்கொடை பணத்திற்கு வரி கிடையாது. ஆனால், நிறுவனங்கள் நன்கொடை குறித்த தகவலை தங்களது வருடாந்திர அறிக்கையில் வெளியிட வேண்டும்.

தேர்தல் பத்திரங்கள் வெளியிட தகுதி?
1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29A பிரிவின் கீழ் பதிவு செய்து கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் ஒரு சதவீதம் வாக்குகளை வைத்து இருப்பவர்கள் இந்த பத்திரங்களை வெளியிடுவதற்கு தகுதியானவர்கள். இவர்கள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வசூலித்துக் கொள்ள முடியும். தேர்தல் நன்கொடை கொடுப்பவர்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டியதில்லை. இதனால், யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்ற விஷயம் வெளியே தெரியாது.

Rewa MP: மது குடிங்க,சிகரெட் பிடிங்க,புகையிலை மெல்லுங்க! நீர் சேமிப்பு குறித்து பாஜக எம்.பி. சர்ச்சைப் பேச்சு

யாரெல்லாம் தேர்தல் பத்திரங்கள் வாங்கலாம்?
இந்திய குடிமக்கள், நாட்டில் நிறுவப்பட்டு இருக்கும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். இந்தப் பத்திரங்கள் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் அரசு குறிப்பிடும் பத்து நாட்களில் விற்பனைக்கு வரும். இந்த பத்திரங்கள் ரூ. 1,000, ரூ. 10,000, ரூ. 1 லட்சம், ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 1 கோடி ஆகிய முக மதிப்புகளில் வெளியிடப்படும்.

எங்கு தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்?
இந்தியாவில் இந்த பத்திரங்களை வெளியிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரே வங்கி எஸ்பிஐ வங்கிதான். லக்னோ, சிம்லா, டேராடூன், கொல்கத்தா, குவஹாத்தி, சென்னை, பாட்னா, புதுடெல்லி, சண்டிகர், ஸ்ரீநகர், காந்திநகர், போபால், ராய்பூர், மும்பை ஆகிய இடங்களில் இருக்கும் எஸ்பிஐ வங்கி கிளைகளில் இந்த பத்திரங்கள் கிடைக்கும். 

எத்தனை நாட்களுக்கு பத்திரங்கள் செல்லும்?
தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குத் தான் செல்லும். இதற்குப் பின்னர் டெபாசிட் செய்யப்படும் பத்திரங்களின் மூலம் கிடைக்கும் நன்கொடை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட மாட்டாது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் மட்டும் கூடுதலாக 30 நாட்களுக்கு பத்திரங்கள் கிடைக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios