டிஏபி உரத்திற்கான மானியத்தை 140% உயர்த்திய மத்திய அரசு..! பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க முடிவு
டிஏபி உரத்திற்கு மத்திய அரசு வழங்கிவந்த மானியத்தை மேலும் 140% உயர்த்தி வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது மத்திய அரசு.
விவசாயிகள் ஏற்கனவே பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டங்களை சந்தித்துவரும் நிலையில், உரத்தின் விலை உயர்வு விவசாயிகளை கடுமையாக பாதித்தது. மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துவந்தன.
இந்நிலையில், உர விலை உயர்வை குறைப்பது குறித்து பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில், டிஏபி உரத்தின் விலை உயர்வுக்கான காரணம் விரிவாக விளக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு மூட்டை டிஏபி உரம் ரூ.1700க்கு விற்கப்பட்டது. அதில் மத்திய அரசின் மானியமான ரூ.500 போக, ரூ.1200க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இப்போது, டிஏபி உரம் மூட்டை ரூ.2400க்கு விற்கப்பட்ட நிலையில், பாஸ்பரிக் ஆசிட், அம்மோனியா ஆகிய மூலப்பொருட்களின் விலை 60% மற்றும் 70% உயர்ந்ததால் தான் உரத்தின் விலை உயர்ந்ததாக பிரதமர் மோடியிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் டிஏபி உரத்தின் விலை உயர்வு விவசாயிகளை பாதிக்காதவகையில், பழைய விலைக்கே உரம் விற்பனை செய்யப்பட ஏதுவாக, இதுவரை வழங்கப்பட்டு வந்த ரூ.500 என்ற மானியம், ரூ.1200ஆக உயர்த்தப்படுவதாகவும், அந்த இழப்பை மத்திய அரசே ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவால் விவசாயிகளுக்கு டிஏபி உரம் எப்போதும்போலவே மூட்டை ரூ.1200க்கே கிடைக்கும். இது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் வரலாற்று சிறப்புமிக்க முடிவாக அமைந்துள்ளது.
மத்திய அரசு உர மானியத்திற்கு ஏற்கனவே ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் கோடி செலவு செய்துவரும் நிலையில், இப்போது இந்த மானிய உயர்வால் கூடுதலாக ரூ.14,775 கோடி செலவு ஆகும்.