300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து, 55 மணி நேரத்துக்குப் பின் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு..
மத்தியப்பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டிரை வயது சிறுமி 55 மணி நேரத்துக்குப் பின்னர் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் மூங்கவுலி கிராமத்தில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் இரண்டரை வயது சிறுமி நேற்று முன்தினம் தவறி விழுந்தார். விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. சிறுமியை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வந்தது. செவ்வாய்கிழமை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி சுமார் 20 அடி ஆழத்தில் முதலில் காணப்பட்டார். பின்னர் சிறிது சிறிதாக சறுக்கி 100 அடி ஆழத்திற்கு சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
விரைவில், ராணுவம் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் அவசர மீட்புப் படை மீட்புப் பணிகளில் இணைந்து செயல்பட்டது. பொக்லைன் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தொடர்ந்து 55 மணி நேரம் மீட்புப் பணி நடந்து வந்தது. பாறைகள் நிறைந்து இருந்த காரணத்தால், மீட்புப் பணியில் தாமதம் ஏற்படுகிறது என்று கூறப்பட்டு வந்தது. சிறுமி மயக்கம் அடையாமல் இருப்பதற்காக தொடர்ந்து ஆக்சிஜனும் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று 55 மணி நேரத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டார். ஆனால், சிறுமிக்கு சுயநினைவு இல்லை என்று கூறப்பட்டது. சிகிச்சைக்காக சிறுமி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், சிறுமி உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செஹோர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் திவாரி இதுகுறித்து பேசிய போது "எல்லா முயற்சிகளையும் செய்தும் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மருத்துவர்கள் குழுவால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்தது" என்று தெரிவித்தார்.
முன்னதாக இந்த சம்பவத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேரடியாக தலையிட்டு அவ்வப்போது விசாரித்து வந்தார்.இன்று ரோபோ நிபுணர்கள் குழு மீட்புப் பணியில் சேர்ந்தது. குழந்தையின் நிலை குறித்த தகவல்களை சேகரிக்க ஆழ்துளை கிணற்றில் ரோபோ அனுப்பப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்தியாவிலேயே புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர் - டாடா குழும தலைவர் சந்திரசேகர்