இந்தியாவிலேயே புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர் - டாடா குழும தலைவர் சந்திரசேகர்
இந்தியாவிலேயே புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர் என்று டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பில் டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையம் தொடக்க விழா நடைபெற்றது. சென்னையை அடுத்த ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 4.0 தொழில் மையத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் சி.வி. கணேசன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பாலு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை, டாடா சன் குழும தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு விழாவில் பேசிய டாடா சன் குழும தலைவர் சந்திர சேகரன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இந்தியாவிலேயே புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர். தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதால் மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ” டாடா குழுமத்தின் தலைவர் இங்கே வந்திருப்பது பெரிய மகிழ்ச்சி. தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு தமிழர் உலகின் தலைசிறந்த டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பில் அமர்ந்திருப்பதும், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து இந்தளவு முன்னேறி இருக்கிறார் என்பதும் தமிழ்நாட்டிற்கும், நமக்கும் மிகப்பெரிய பெருமையாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டு இளைஞர் சந்திரசேகரனை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு முன்னேற்றம் காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். யார் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யார் மறைத்தாலும் தமிழ்நாடு என்பது அனைத்து துறைகளிலும், தலைசிறந்த மாநிலமாக உள்ளது. தலைநிமிர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் வேலை நாட்கள் 198ல் இருந்து 205 ஆக உயர்வு.. மாநில அரசு அதிரடி உத்தரவு..