டெல்லியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என்றும், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக இந்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் கொரோனா 2வது அலை பரவல் மக்களை பெருதுயரில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தலை நகர் டெல்லியில் கொரோனா தொற்றாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையாளும் உயிரிழக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் புதிதாச்க 18 ஆயிரத்து 043 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 12 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் 448 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனால் டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், தடுப்பு மருந்துகள் கிடைக்காமல் மக்கள் கொத்து கொத்தாக மடிந்து வருகின்றனர். எனவே டெல்லியில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவை மே 10ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். 

அதன் தொடர்ச்சியாக டெல்லியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என்றும், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக இந்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இலவச ரேஷன் பொருட்களை 2 மாதத்திற்கு வழங்க உத்தரவிட்டுள்ளதால், மக்கள் அனைவரும் 2 மாதத்திற்கு முழு ஊரடங்கு நீடிக்குமோ? என அச்ச வேண்டாம் என்றும், மக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே 2 மாதத்திற்கு இலவசமாக பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.