பட்ஜெட்டுக்கு காங்கிரஸ் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு – இன்று நடத்தி இருக்க கூடாது என கண்டனம்
கேரளாவின் ஐஎம்எல் கட்சியின் எம்பி இ.அகமது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் எழுந்தது. பாஜகவினர், பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், காங்கிரஸ் எம்பிக்கள் பட்ஜெட் தாக்கல் செய்ய கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், சபாநாயகர், சுமித்ரா மகாஜன் அறையில் பஞ்சாயத்தும் நடந்தது. இறுதியில் 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்வது என முடிவும் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் 11 மணிக்கு கூட்டம் கூடியது. அப்போது பேசிய கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இ.அகமது 40 அரசியல் அனுபவம் கொண்டவர். ஐஎம்எல் கட்சியின் ஒரு மூத்த தலைவர். அவரது இழப்புக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யபட்டு இருக்க கூடாது. இது தவறான அணுகுமுறையாகும் என கண்டனம் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்களும் கடும் கோஷம் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் சுமிதரா மகாஜன், இது காங்கிரசாரை போன்றே, எங்களுக்கும் மன வருத்தம் அளிக்க கூடிய விஷயமாகும். இது தவிர்க்க முடியாத அம்சம் என்பதால், தொடர்ந்து நிறைவேற்ற வேண்டியுள்ளது என கூறி, அருண் ஜேட்லியை அறிக்கை படிக்க அழைத்தார்.