மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கும்போது மணமகனுக்கு ஏற்பட்ட கை நடுக்கத்தால் திருமணம் நின்ற சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மணமகனுக்கு கை நடுக்கம்

திருமணம் மற்றும் வீடு கட்டுவது எளிதான காரியமல்ல என்பது நமக்குத் தெரியும். வீடு கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார் என்பது ஒரு பழமொழியே இருக்கு. ஆனால், இப்போதெல்லாம் திருமண மண்டபங்களில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால், திருமணமே வேண்டாம் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. குறிப்பாக, பெண்கள் திருமணத்தை நிறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கும்போது மணமகனுக்கு ஏற்பட்ட கை நடுக்கத்தால் திருமணம் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிந்தூர் தானம் நிகழ்வு

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் மணமகனுக்கு ஏற்பட்ட கை நடுக்கத்தால் கல்யாணம் நின்று போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்திருமணத்தில் மணமகளுக்கு நெற்றியில் குங்குமம் வைக்கும் சிந்தூர் தானம் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது மணமகன், மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கும் நேரத்தில் திடீரென அவரது கை விரல்களில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த மணமகள் சட்டென திருமணத்தை நிறுத்த கோரியுள்ளார்.

நின்றுபோன திருமணம்

மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணப்பெண்ணை சமாதானப்படுத்த முயன்றும் அவர் மறுத்துவிட்டார். இந்த சம்பவம் அறிந்த அப்பகுதியில் உள்ள போலீசார் இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி, திருமணத்தை நடத்த முயற்சித்துள்ளனர். இருப்பினும் மணமளின் பிடிவாதத்தால் சமாதானப் பேச்சும் சுமூகமாக நடைபெறவில்லை. இதனையடுத்து திருமணம் நின்று போனது. மணமகன் உடல்நிலை சரியில்லை என்று மணப்பெண் குற்றம் சாட்டினார். மேலும், அவரை பைத்தியம் என்று அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.