#BREAKING கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து, சிகிச்சை முறை என்ன?... மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் வெளியீடு...!
கருப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கும் படி மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா நோயாளிகள் மத்தியில் வேகமாக பரவி வரும் கருப்பு பூஞ்சை என்ற நோய் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்டுப்பாட்டில் இல்லாத நீரழிவு நோயாளிகளை கரும்பூஞ்சை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக எய்ம்ஸ் எச்சரித்துள்ளது. ராஜஸ்தான், ஹரியானா, உத்திரப்பிரதேசம், டெல்லி, ஆந்திரா, கேரளாவைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் சர்க்கரை நோயாளிகள் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி கருப்பு பூஞ்சை நோய் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், அதற்கான மருந்து கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கும் படி மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கருப்பு பூஞ்சை தொற்று அறிவிக்கப்பட்ட நோயாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் நோயைக் கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பது குறித்த தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க E.N.T. மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், நரம்பியல் மருத்துவர்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
Amphotericin என்ற மருந்தை கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு பயன்படுத்தலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நோயின் தாக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் அளவு ஆகியவரை குறித்து உடனடியாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென மாநில அரசுகள் மட்டும் யூனியன் பிரதேசங்களுக்கு தனித்தனியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.