கர்நாடக தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்முன் வெளியிட்ட பாஜக...!
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பாகவே, பாஜகவின் தொழில்நுட்ப தலைமை அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் மே மாதத்துடன் 5 ஆண்டுகள் முடிவடைவதை அடுத்து அங்கு தேர்தல் நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், கர்நாடக மாநில பேரவை தேர்தல் வரும் மே 12 ஆம் தேதி நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் அறிவித்தார். இது
குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகா சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் மே 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை
நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
கர்நாடக பேரவை தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்திருப்பதாகவும்
மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க எளிமையான முறை பின்பற்றப்படும் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறினார்.
நாடு முழுவதும பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியினை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. தேர்தல் ஆணையம்
தேதியினை வெளியிடுவதற்கு முன்னதாக பாஜகவின் தொழில்நுட்ப தலைமை அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் சரியான தேதியினை பதிவிட்டுள்ளார்.
அதாவது, தலைமை தேர்தல் அதிகாரி, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே பாஜகவின் தொழில்நுட்பட அதிகாரி அமித் மலவியா தனது டுவிட்டர் பக்கத்தில் சரியான தேதியினை பதிவிட்டுள்ளார். இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.