காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் இணைந்தால் மட்டுமே பாஜகவை எதிர்க்க முடியும் என்று கருதி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிளின் கூட்டத்தை நிதிஷ்குமார் நடத்தினார்.

இதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஒருங்கிணைந்த ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவ சேனா, சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய லோக் தளம், அப்னா தளம், ஜம்மு காஷ்மீர் தேசிய காங்கிரஸ், பிடிபி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கனான அஜெண்டாவை அறிவித்தார். மேலும் பேசிய “காங்கிரஸுக்கு அதிகாரத்திலோ, பிரதமர் பதவியிலோ ஆர்வம் இல்லை என்று ஸ்டாலினின் பிறந்தநாளில் நான் ஏற்கனவே சென்னையில் கூறியிருந்தேன். இந்த சந்திப்பில் எங்களின் நோக்கம் நமக்கான அதிகாரத்தை பெறுவது அல்ல. இது நமது அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகியவற்றைப் பாதுகாப்பதாகும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட 36 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது INDIA - Indian national demcratic inclusive alliance என்று பெயரிட்டுள்ளன. இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கிய கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் பாஜக அரசை கடுமையாக சாடினர். நாடு, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டதே இந்த கூட்டணி என்றும் தெரிவித்தனர். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இந்த சந்திப்பு ஆக்கபூர்வமான சந்திப்பாக இருந்ததாக தெரிவித்திருந்தார்.

"பிரதமர் மோடி தனது 10 ஆண்டுகால ஆட்சியில் ஏறக்குறைய அனைத்து துறைகளையும் முழுவதுமாக குழப்பிவிட்டார். அவரை அகற்றுவதற்கான நேரம் இது" என்று எதிர்க்கட்சி கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், "நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும். நரேந்திர மோடியின் ஆட்சியில் அனைத்தும் நசுக்கப்பட்டு வருகிறது" என்று விமர்சித்திருந்தார். 

தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, மத்தியில் மோடி ஆட்சியின் போது அரசியலமைப்புச் சட்டம் சிதைக்கப்பட்டு, நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை சீர்குலைத்துள்ளதாகக் கூறினார். இந்த கூட்டத்திற்கு பிறகு மாலை 4 மணியளவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது இந்த கூட்டணியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

” குடும்பத்தால், குடும்பத்திற்காக அரசியல் செய்வதே அவர்களின் நோக்கம்” எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி..