பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மீண்டும் விதிமீறல் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனது. இந்த சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் வழங்கப்படுவது குறித்து செய்திகள் கேள்விப்பட்டு இருக்கலாம். இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் மீண்டும் விதிமீறல் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள், ரகசியமாக செல்போன்களைப் பயன்படுத்தி வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் கசியவிட்டுள்ளனர்.
ஈசாலா கப் நம்தே; கைதிகள் கோஷம்
இப்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் "ஆர்சிபி தான் கோப்பையை வெல்லும், ஈசாலா கப் நம்தே" என்று அந்த கைதிகள் கோஷமிடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியபோது, கழிவறை அறையில் இருந்த தண்ணீர் குழாய்க்குள் செல்போன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போன்கள் ஈரமாகாமல் இருக்க, அவற்றை பால் பாக்கெட்டுகளில் சுற்றி மிக லாவகமாக குழாய்க்குள் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தொடர்ந்து விதிமீறலில் பரப்பன அக்ரஹாரா சிறை
இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக சிறையில் பணியில் இருந்த 3 வார்டன்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறைக்குள் ஏர்டெல் சிக்னல் கிடைப்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பரப்பன அக்ரஹாரா சிறையில் தொடர்ந்து இதுபோல் கைதிகள் விதிமீறலில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து இனி இதுபோல் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


