ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் பயங்கரவாதிகளை தைரியமாக எதிர்த்துப் போராடி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த ராணுவ தாக்குதல்களில் இடம் பெற்று இருந்த நாய் ஜூம், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது

.''அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நாய் ஜூம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாயின் பின்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முகத்தில் ஏற்பட்டு இருந்த காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் 24 முதல் 48 மணி நேரம் மிகவும் மோசமானது. கூர்ந்து மருத்துவ கண்காணிப்பில் கவனித்து வருகிறோம்'' என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜம்மு, காஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கு நாய் ஜூம் பயன்படுத்தப்படுகிறது. சம்பவத்தன்று, தீவிரவாதிகள் இரண்டு முறை நாய் மீது சுட்டுள்ளனர். அப்போதும், தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் நாய் ஜூம் ஈடுபட்டுள்ளது. நாய் ஜூம் தீவிரவாதிகளை பிடிப்பதில் வீரத்துடன் போராடியது, உண்மையில் ஊக்கமளிப்பதாகவும், சிலிர்ப்பாகவும் இருந்தது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பின்னரும், துணிச்சலுடன் போராடி, இரண்டு தீவிரவாதிகள் இறப்பதற்கு காரணமாக இருந்துள்ளது. 

மேலும் படிக்க:human sacrifice:கேரளாவில் நரபலி புதிதல்ல! 30 ஆண்டுகளுக்குமுன் பணக்காரராக மகளை கொலை செய்த மருத்துவர்

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள டாங்பாவா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். திங்கள் கிழமை காலை, தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டில் அவர்களை பிடிப்பதற்காக நாய் ஜூம் அனுப்பப்பட்டது. அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அப்படி இருந்தும் தொடர்ந்து போராடியது.

நாய் ஜூம்மிற்கு பெரிய அளவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. துணிச்சலுடன், மூர்க்கமாக, உறுதியாக தேடுதல் வேட்டையில் ஈடுபடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து வீழ்த்துவதற்கு ஜூம் நாய்க்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீர் பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளில் ஜூம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எப்போதும் போல திங்கள் கிழமையும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் இடத்தில் இருந்து வெளியே வருவதற்கு ஜூம் நாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:Vande Bharat Express Train: 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை தொடக்கம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

துணிச்சலாக, வீரத்துடன் போராடி தீவிரவாதிகள் இருவரை கொல்லுவதற்கு காரணமாக இருந்த ஜூம் நாய்க்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.