மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு... முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!
இந்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடைய இருந்த நிலையில், மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 ஆயிரத்து 517 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14 லட்சத்து 11 ஆயிரத்து 320 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 11 லட்சத்து 94 ஆயிரத்து 582 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2 லட்சத்து 07 ஆயிரத்து 467 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கடந்த 5ம் தேதி முதல் ஆந்திராவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடைய இருந்த நிலையில், மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது போலவே காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அத்தியாவசியக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணிக்கு மேல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அத்தியாவசிய போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.