ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சென்ற சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து (Bus Accident) விபத்துக்குள்ளானது.

ஆந்திரப் பிரதேசம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் இன்று அதிர்ச்சியூட்டும் சாலை விபத்து ஒன்று இன்று நடைபெற்றுள்ளது. தனியார் சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால், 15 பயணிகள் உயிரிழந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு குழுக்கள் தற்போது சம்பவ இடத்தில் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றன.

விபத்து நடந்த இடம்

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் குழு, புண்ணிய தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டது. பத்ராச்சலம் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு அன்னவரம் நோக்கி சென்றபோது இந்த எதிர்பாராத விபத்து நிகழ்ந்துள்ளது. சிந்தூர் பகுதியிலிருந்து மாரேடுமில்லி மலைச்சாலையை கடந்து செல்லும் போது, ​​மோசமான சாலை வளைவு மற்றும் கட்டுப்பாடு இழப்பு காரணமாக பேருந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

உடனடி மீட்பு நடவடிக்கை

தகவல் கிடைத்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் வேகமாக சம்பவ இடத்திற்குச் சென்றனர். பள்ளத்தாக்கில் சிக்கிய பயணிகளை முதலில் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். விபத்து நடந்த போது பேருந்தில் சுமார் 30 பேர் இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். சம்பவம் குறித்த மேலதிக அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாக வேண்டியுள்ளது.