நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதங்களை வீசியதால் காங்கிரஸ் எம்.பி.க்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவை

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றிக் கொண்டிருந்தபோது அமளி வெடித்தது. ராகுல் காந்தி பேச்சுக்கு எதிராக பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவரது உரையின் போது, சில காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதங்களை வீசியதாகக் கூறப்படுகிறது, இது அவைக்குள் மேலும் பதற்றத்தை அதிகரித்தது. இந்த இடையூறால், அவை நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் தடைபட்டு, தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

இந்த ஒழுங்கற்ற நடத்தைக்கு பதிலடியாக தமிழக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், ஹிபி ஈடன், அமரீந்தர் சிங், ராஜா வாரிங், குர்ஜீத் சிங் அவுஜ்லா மற்றும் கிரண் குமார் ரெட்டி உள்பட 8 பேரை மீதமுள்ள நாட்களுக்கு சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக), சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடம் முறைப்படி புகார் அளிக்கும் என்று கூறியுள்ளது.

மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மூலம் அவர் சமரசம் செய்துகொண்டு நாட்டை விற்கிறார்' என்று குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "மோடிஜி அதிர்ச்சியில் இருக்கிறார். கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த (அமெரிக்க-இந்திய) வர்த்தக ஒப்பந்தத்தில் நரேந்திர மோடி நேற்று இரவு கையெழுத்திட்டுள்ளார். அவர் மீது உள்ளது. நரேந்திர மோடிஜியின் பிம்பம் சேதமடையக்கூடும். முக்கிய விஷயம் என்னவென்றால், நமது பிரதமர் சமரசம் செய்துகொண்டுள்ளார்.

மோடி நாட்டை விற்று விட்டார்

பொதுமக்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். முதல் முறையாக, குடியரசுத் தலைவர் உரை மீது எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கப்படவில்லை." "நரேந்திர மோடிஜி சமரசம் செய்துகொண்டதால், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் உங்கள் கடின உழைப்பை விற்றுவிட்டார். அவர் நாட்டை விற்றுவிட்டார். அவரது பிம்பத்தை உருவாக்கியவர்களே இப்போது அந்த பிம்பத்தை உடைப்பதால் நரேந்திர மோடிஜி பயப்படுகிறார்'' என்று ராகுல் காந்தி மேலும் தெரிவித்தார்.