ரூபாய் நோட்டுகள் குறித்து அம்பானி, அதானிக்கு முன்பே தெரியும் - பாஜக எம்எல்ஏ பரபரப்பு பேச்சு
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கும் முன்பே அம்பானி மற்றும் அதானி குழுமத்துக்கு தெரியும் என பாஜக எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறினார்.
ரூபாய் நோட்டு விவகாரம் நாடு முழுவதும் மக்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் பாஜகவை சேர்ந்த பவானி சிங், “கடந்த 8ம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
இதைதொடர்ந்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற இன்றுவரை 9 நாட்களாக மக்கள், தங்களது பணத்தை வங்கியில் மாற்ற அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த நடவடிக்கை 80 சதவீத ஏழை மக்களுக்குதான் பெரும் சோதனையாக உள்ளது” என்றார்.
இதையொட்டி கடந்த 8ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், "ரூபாய் நோட்டு மாற்று நடவடிக்கை அம்பானி, அதானிக்கு குழுமத்துக்கு முன்பே தெரியும்" என்ற பகீர் தகவலை கூறியுள்ளார்.
மேலும், புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளின் தரம் "கள்ள நோட்டு" போன்று உள்ளதாக அவர் கூறியது வீடியோ பதிவில் உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த வீடியோ குறித்து எம்.எல்.ஏ பவானி சிங் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், "நான் ஒருபோதும் பேட்டியில் அவ்வாறு கூறவில்லை, அந்த வீடியோ செயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் பேட்டிக்கு பின் சில பத்திரிகையாளருடன் பேசி கொண்டிருந்தததை திரித்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.