Some vegetables and their medical Benefits

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவரைக்காய்

அவரையிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரை பிஞ்சு நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இது சூட்டுடம்புக்கு மிகவும் ஏற்றது. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் உகந்தது. மேலும், இதில் உள்ள நார் சத்து உடலை வலுவாக்கும் என்பதுடன், அதிக எடை உள்ளவர்கள் இதை உட்கொண்டால், உடம்பு இளைக்கவும் உறுதுணை புரியும்.

கத்திரிக்காய்

பொதுவாக கத்திரிக்காய் என்றாலே பலருக்கு பிடிப்பதில்லை. சிலருக்கு இது எட்டி காயாக கூட இருக்கலாம். ஆனால், இதில் அரிய குணங்கள் இருப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இதை தரம் பிரித்து உண்பதிலும் கவனம் இருப்பது அவசியம் கத்திரிக்காயில் பல வண்ணங்கள் உண்டு, என்றாலும் அனைத்திலும் உள்ள சத்துக்கள் ஒன்றுதான். பிஞ்சு கத்திரிக்காய் சமைப்பதற்கு ஏற்றது. முற்றின கத்திரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி, சிரங்கை ஏற்படுத்தும். இதில், தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தரும் வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால், வாயு, பித்தம், கபம் போகும். அதனால்தான், பத்தியத்துக்கு இக்காயை பயன்படுத்துகின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

வெண்டைக்காய்

பொதுவாக வெண்டைக்காயை மூளை வளர்ச்சிக்கு ஏற்றது என்று குறிப்பிடுவது உண்டு. ஆனால், இதன் சுபாவம் குளிர்ச்சி தருவது. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலை பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி உயிர்சத்துக்கள் உள்ளன. இதை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டை தணிக்கும். உஷ்ண இருமலை குணமாக்கும். வெண்டைக்காய் விந்துவை கட்டி போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டை பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினமும் வெறும் வயிற்றில் உண்டால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்படும். உடம்பில் வாயு உள்ளவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தும் என்பதில் கவனம் தேவை.

தேங்காய்

உப்பு இல்லாத பண்டம் குப்பையிலேயே என்பதை போல், தேங்காய் இல்லாத சமையலும் சுவைக்காது. கேரள மக்கள் உணவில் அதிகளவில் சேர்த்து கொள்ளும் தேங்காயில் பல நன்மைகள் உண்டு. தமிழகத்தில் கூட சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில், ஏ, பி வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால், தாது விளையும். தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூட்டை மாற்றும்.

புடலங்காய்

நீர் சத்து மிகுந்த காய்களில் இதுவும் ஒன்று. சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அலைச்சலை போக்கும். தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தை போக்கும். வயிற்று பொருமல், வயிற்று பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.

கொத்தவரங்காய்

சிறுநீரகத்தை பெருக்கும் தன்மை கொண்டது. இது சூடு தன்மை கொண்டது. இதை தொடர்ந்து உண்டால் சீதம் போக வாய்ப்புண்டு. இது பித்தவாத கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உகந்தது அல்ல. இதன் கெட்ட குணங்களை போக்க இத்துடன் தேங்காய் பருப்பு, இஞ்சி, சீரகம் சேர்த்து சமைக்க வேண்டும்.

வாழைத்தண்டு

வாழையை பொறுத்தவரை அடி முதல் நுனி வரை அனைத்தும் மக்களுக்கு பயன்தரக்கூடியது. அதிலும், வாழைத்தண்டு மக்களுக்கு மிகவும் உகந்தது. இதில், நார் சத்து அதிகளவில் உள்ளது. பித்தத்தை தணிக்க கூடியது. சூடு ஏற்படுத்தும் தன்மை இதற்கு உண்டு என்றாலும், சிறுநீரை பெருக்கும். வாழைத்தண்டு பச்சடி உடம்பின் உஷ்ணத்தை போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றை தணிக்கும். கபத்தை நீக்கும். இதை உண்டால் குடலில் சிக்கிய முடி, தோல், நஞ்சு ஆகியவை நீங்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது இதை உண்ணுவது நல்லது.