சில எளிய உணவுப் பொருட்களும் அவற்றில் இருக்கும் அரிய மருத்துவமும்…
சுக்கு:
மஞ்சளை போலவே வடிவம் கொண்டது சுக்கு. இதற்குத்தான் உபயோகிக்க வேண்டும், இதற்கு கூடாது என்ற வரம்பே இல்லை. எந்த காலத்துக்கும், எதற்கும், யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
வாயு தொல்லை, வாத நோய், வயிற்று குத்தல், தலை வலி, பல் வலி, காது குடைச்சல் போன்றவற்றை போக்கும். பசியைத் தூண்டும். மதியம் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் பெரு விரலில் பாதி அளவுக்கு தோல் இல்லாத சுக்கை இஞ்சியை சாப்பிட்டது போலவே சிறுக சிறுக சாப்பிட வேண்டும்.
பொதுவாக ஒரு சுக்கு துண்டை மேல் தோல் நீக்கி நறுக்கி ஒரு பெரிய டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி சிறிது பால், சர்க்கரை கலந்து தினமும் இருவேளை குடித்துவர மேற் கூறிய நோய்கள் நீங்கும்.
இஞ்சி:
பித்த வாய்வு, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் கடினமான உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்யும். காலையில் வெறும் வயிற்றில் பெரு விரல் அளவுக்கு இஞ்சியை தோல் சீவி விட்டு வாயில் போட்டபின் சிறுக சிறுக ஊரும் எச்சிலை விழுங்க சற்று நேரத்தில் நல்ல பசி எடுக்கும்.
கடுக்காய்:
இஞ்சி, சுக்கு சாப்பிட்டதுபோல் மாலையில் சாப்பிடுவதற்கு முன் கடுக்காய் விதையை எடுத்துவிட்டு வாயில் போட்டால் துவர்ப்பாக இருக்கும். கடுக்காய் சாப்பிடும்போது மாத கணக்கில் குடலில் தங்கியுள்ள கழிவுகளை அகற்றுகிறது.
ஜீரண சக்தி அதிகரிக்கும், இளமையை பாதுகாக்கும், ஐம்புலன்களுக்கும் சக்தி தரும். கனமான தொடைப்பகுதியை சுருக்கும், தோல் வியாதியை குணப்படுத்தும், சுவாச நோய்களை கட்டுப்படுத்தும்,
ரத்த நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்தும். இதனால் உடலின் முழு இயக்கமும் சீரடையும். நோய் அண்டாது.
மஞ்சள்
மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், விளக்கில் மஞ்சளை சுட்டு அந்த புகையை மூக்கில் காட்டினால் உடனே சரியாகும். கல்லீரலில் பித்தநீர் சுரப்பதையும், கட்டியாவதையும் குணப்படுத்தும். ரத்தத்தை சுத்தப்படுத்தி குடற்பூச்சிகளை கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோய்களை கட்டுப்படுத்தும். நெஞ்சு சளி, சரும நோய்களை போக்கும்.
மிளகு
இது சிறந்த ஆன்ட்டிபயாடிக் ஆகும். சாதாரண சமையலில் மிளகும் சீரகமும் சேரும்போது, அதன் ருசியும் மணமும் பன்மடங்கு கூடும். 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மிளகு வீக்கத்தை குறைக்கும். வாய்ப்புண், நெஞ்சில் சளி ஆகியவற்றை குணமாக்கும். அதிக அளவு வியர்வையை தந்து, உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டது.
சீரகம்:
சீரகத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே, அது பூஞ்சைத் தொற்றுக்கு எதிராகவும் போராடக்கூடியது. சிறுநீரகங்களின் செயல்பாடு சீராக இருக்க உதவுகிறது. சீரகம் ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தை சரியான நிலையில் வைக்கக் கூடியது. வயிற்றுச் சூட்டைத்தணிக்கும்.