உங்களுக்குத் தெரியுமா? பாத எரிச்சல் குணமாக மருதாணியும், எலுமிச்சைச் சாறும் உதவும்...
கோடைக்காலம் மிக அருகில் என்பதை வாட்டியெடுக்கும் வெயில் உணர்த்துகிறது. வெயில் காலத்தில் குளுமை தரும் உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் உடல் நலம் சீராக இருக்கும்.
வெயிலில் அலைந்துவிட்டு வருகிறவர்களுக்கு, செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்து இயற்கை குளிர்பானங்களைத் தரலாம். எலுமிச்சை சாறு பிழிந்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் தேவையான போது அதனுடன் குளிர்ந்த நீர் ஊற்றிப் பருகத் தரலாம்.
** எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
** மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை போன்றவற்றுக்கு உகந்தது எலுமிச்சைச் சாறு.
** எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகளும் சுருக்கங்களும் மறையும். எலுமிச்சைச் சாற்றுடன் சிறிது பால் ஏடு கலந்து முகத்தில் தடவினால் முகம் பளிச்சிடும்.
** தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகிவர உடல் எடை குறையும். இதையே இரவில் குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும். மனம் அமைதி அடையும்.
** தலையில் சிறிது எலுமிச்சைச் சாற்றைத் தடவி, சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். பித்தம், உடல் சூடு அடங்கும்.
** எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து குடித்துவந்தால் வறட்டு இருமல் தீரும்.
** மருதாணியை அரைத்து எலுமிச்சைச் சாற்றில் கலந்து பாதத்தில் தடவிவந்தால் பாத எரிச்சல் குணமாகும்.