- Home
- உலகம்
- இந்தியா அமெரிக்காவின் ஏஜென்டா..? ஈரான் மீது குண்டு வீசத் தளம் கொடுத்ததா? மத்திய அரசு அதிரடி விளக்கம்..!
இந்தியா அமெரிக்காவின் ஏஜென்டா..? ஈரான் மீது குண்டு வீசத் தளம் கொடுத்ததா? மத்திய அரசு அதிரடி விளக்கம்..!
இந்தியா தனது இறையாண்மையிலும், சர்வதேச உறவுகளிலும் எப்போதும் நடுநிலையைக் கடைபிடித்து வருகிறது. குறிப்பாக ஈரான் போன்ற நட்பு நாடுகளுக்கு எதிராகத் தனது மண்ணை வேறு ஒரு நாடு பயன்படுத்த இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது

India
சர்வதேச அரங்கில் இந்தியாவையும்,அமெரிக்காவையும் இணைத்து பரவிய ஒரு பயங்கரமான 'போலிச் செய்தி' பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானைத் தாக்குவதற்கு இந்தியா தனது ராணுவத் தளத்தை அமெரிக்காவிற்குத் தாரை வார்த்துவிட்டது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிய இந்த விவகாரத்தில், மத்திய அரசு அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளது.
அமெரிக்காவிற்கு ராணுவ உதவியா?
சமூக ஊடகங்களில் சமீபத்தில் ஒரு தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. அதில், "ஈரான் மீது குண்டு வீசுவதற்காக மேற்கு இந்தியப் பகுதியில் உள்ள ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரியுள்ளது" என்றும், அதற்கு இந்தியா சம்மதித்துவிட்டதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக, கொங்கன் கடற்கரைப் பகுதியில் அமெரிக்காவின் பிரம்மாண்டமான விமானம் தாங்கிப் போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட உள்ளதாக ஒரு பத்திரிகையாளர் பதிவிட்டது இந்த விவாதத்தைத் தூண்டியது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியாவின் பெயரை இதில் இழுத்துவிட்டது சர்வதேச அளவில் தர்மசங்கடத்தை உருவாக்கியது. ஆனால், வெளியுறவு அமைச்சகம் இந்தக் கூற்றுகளை "முற்றிலும் பொய்யானவை மற்றும் திட்டமிட்டு புனையப்பட்டவை" என்று கூறி ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளது.
கிளப்பப்பட்ட பீதி..!
இந்த போலிச் செய்திக்கு அடிப்படையாக தளவாடப் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் சுட்டிக்காட்டப்பட்டது. 2016-ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் படைகளும் எரிபொருள் நிரப்புதல், பழுதுபார்த்தல் மற்றும் ஓய்வுக்காக ஒருவருக்கொருவர் இராணுவ வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை தவறாகச் சித்தரித்த சில சமூக ஊடகப் பதிவுகள், இது ஈரான் மீதான தாக்குதலுக்குப் பயன்படப் போகிறது எனப் பீதியைக் கிளப்பின. "மேற்கு இந்தியாவில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த இந்தியா அனுமதி அளித்துள்ளது" என்ற பதிவு இந்திய வெளியுறவுத் துறையைச் சீண்டியது. இதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர், "போலிச் செய்தி எச்சரிக்கை! இதுபோன்ற ஆதாரமற்ற கூற்றுகளை நம்ப வேண்டாம்" என்று பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கற்பனை செய்திகள்!
பரவிய அந்தப் பதிவில், அமெரிக்காவின் ஒன்பது கால்பந்து மைதான அளவு கொண்ட பிரம்மாண்ட கப்பல் கொங்கன் கடற்கரையில் நிறுத்தப்பட உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், எதார்த்தத்தில் இந்தியக் கடற்படையின் எந்தவொரு கப்பல்துறையும் அத்தகைய ராட்சதக் கப்பலை நிறுத்தும் அளவுக்கு வசதி கொண்டவை அல்ல. இவ்வளவு பெரிய தொழில்நுட்ப மற்றும் ராணுவ உண்மைகளை மறைத்து, வெறும் அரசியல் உள்நோக்கத்திற்காக இத்தகைய செய்திகள் பரப்பப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
இந்தியா தனது இறையாண்மையிலும், சர்வதேச உறவுகளிலும் எப்போதும் நடுநிலையைக் கடைபிடித்து வருகிறது. குறிப்பாக ஈரான் போன்ற நட்பு நாடுகளுக்கு எதிராகத் தனது மண்ணை வேறு ஒரு நாடு பயன்படுத்த இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. திட்டமிட்டுப் பரப்பப்படும் இத்தகைய 'டிஜிட்டல்' விஷமங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே இந்தச் சம்பவத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும் பாடம்.
