இந்தியா-பாக். போரில் 7 விமானங்கள் வீழ்த்தப்பட்டன... மீண்டும் சீண்டும் டிரம்ப்!
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இந்தப் போர் அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் பற்றி டொனால்டு டிரம்ப்
ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையிட்டு நிறுத்தியதாக மீண்டும் கூறியுள்ளார். இந்த போர் அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
“பல போர்களை நிறுத்தியுள்ளேன்”
சமீபத்தில், தென் கொரிய அதிபருடனான சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு பெரிய போர் ஏற்பட்டிருக்கும். ஆனால், அந்த போரை நான் உட்பட, உலகின் பல போர்களை நிறுத்தியுள்ளேன். அந்த போர் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும். ஏனென்றால், அந்தப் போரில் ஏற்கெனவே ஏழு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன” என்று தெரிவித்தார்.
டிரம்ப் தனது தலையீட்டை விவரிக்கையில், “நீங்கள் எங்களுடன் வர்த்தகம் மேற்கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் இப்படி சண்டையிட்டுக் கொண்டால், உங்களுடன் எவ்வித வர்த்தகமும் மேற்கொள்ள மாட்டோம். உங்களுக்கு 24 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்குள் சண்டையை முடித்துக் கொள்ளவும் என்று அவர்களிடம் கூறினோம்” என்று குறிப்பிட்டார்.
டிரம்பின் தொடர் வலியுறுத்தல்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்ததை அடுத்து, இந்திய-பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே நான்கு நாட்களுக்கு மோதல் ஏற்பட்டது. பின்னர் பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் தாக்குதலை நிறுத்தியதாக இந்தியா தெரிவித்தது. டிரம்பின் இந்த கூற்றை இந்தியா திட்டவட்டமாக மறுத்த போதிலும், அவர் தனது கருத்தை தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்தியாவின் மறுப்பு
இதற்கு முன், போரில் ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், தற்போது ஏழு போர் விமானங்கள் என்று அவர் தனது கருத்தை மாற்றியுள்ளார். மேலும், எந்த நாட்டின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை. இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் இதுவரை 30-க்கும் மேற்பட்ட முறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

