காதலர் தின விருந்தாக வந்துள்ள ‘பூக்கி’ சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் திஷான், தனுஷா நடிப்பில், விஜய் ஆண்டனி இசையில் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள பூக்கி திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Pookie Movie Review
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நீண்ட இடைவெளிக்கு பின்னர் இசையமைத்துள்ள படம் பூக்கி. இப்படத்தை அவருடைய மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி தான் தயாரித்து உள்ளார். பூக்கி திரைப்படத்தில் அஜய் திஷான் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் தனுஷா, சுனில், பாண்டியராஜன், லட்சுமி மஞ்சு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை கணேஷ் சந்திரா இயக்கி உள்ளார். இப்படத்திற்கு அவரே ஒளிப்பதிவும் செய்துள்ளார். இப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பூக்கி படத்தின் கதை
நாயகன் அஜய் திஷானும், நாயகி தனுஷாவும் ஒன்றாக காரில் செல்கிறார்கள். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது தனுஷாவை சமாதனப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் அஜய். பேசப் பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் தான் ஏற்படுகிறது. அப்போது இவர்கள் செல்லும் கார் சிக்னலில் நிற்கும்போது, மற்றொரு கார் வேகமாக வந்து இவர்களது காரின் மீது மோதிவிட்டு வேகமாக செல்கிறது. பின்னர் அந்த காரை சேஸ் பண்ணி பிடிக்கும் அஜய், அந்த காரை ஓட்டி வந்தவரிடம் சண்டை போடுகிறார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடியில் இறங்குகிறார்கள்.
பூக்கி விமர்சனம்
அப்போது அவர்களை தனுஷா தடுக்க முயல்கிறார். ஆனால் அஜய் சண்டையை நிறுத்தாததால், அவரை கண்ணத்தில் ஓங்கி அறை விடுகிறார். இதனால் கோபமடைந்த அஜய், தனுஷாவை பதிலுக்கு கண்ணத்தில் பளார் என அறைகிறார். இந்த சண்டையால் இவர்களின் காதல் பிரேக் அப் ஆகி விடுகிறது. இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த சிலர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட, பிரச்சனை மேலும் பெரிதாகிறது. அந்த வீடியோ பேசு பொருள் ஆனதால் இருவராலும் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடையும் அஜய் மற்றும் தனுஷா மன நிம்மதியை தேடி அலைகிறார்கள். இதன்பின்னர் இவர்களின் காதல் என்ன ஆனது ? இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா? இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
பூக்கி படம் எப்படி இருக்கு?
இன்றைய காலகட்டத்தில், நமது கண்முன்னே நடக்கும் சமூக பிரச்சனைகளையும், கலாச்சார சீர்கேடுகளையும் யதார்த்தமாகவும், கலகலப்பாகவும் சொல்லும் வகையில் திரைக்கதை அமைத்து, அதை காட்சிப்படுத்திய இயக்குநருக்கு கைதட்டல் கொடுக்கலாம். முன்பு போல் இல்லாமல், இப்போதெல்லாம் ஆண், பெண் இருவரும் சம்பாதிக்க தொடங்கி இருப்பதால் அவர்களின் காதலுக்கு பெற்றோர் பெரும்பாலும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. அதே வேளையில் அவர்கள் பிரிவுக்கிற்கும், அவர்களின் சந்தோஷத்திற்கும் அவர்களே காரணமாகிறார்கள் என்பதை இயக்குநர் தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நாயகன் அஜய் திஷான், நாயகி தனுஷா இருவருமே புதுமுகங்கள் போல் இல்லாமல் முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக விஜய் ஆண்டனியின் இசை அமைந்துள்ளது. பாடல்களும் ரசிக்கும்படி இருக்கின்றன. இதனால் இந்த காதலர் தினத்திற்கு பக்கா ட்ரீட்டாக இந்த பூக்கி அமைந்துள்ளது.

