- Home
- Cinema
- தொலைக்காட்சி
- நிகிலுக்கு வீடு... சூப்பர் சிங்கர் பைனலில் வாரி வழங்கப்பட்ட பரிசுகள் என்னென்ன? முழு விவரம் இதோ
நிகிலுக்கு வீடு... சூப்பர் சிங்கர் பைனலில் வாரி வழங்கப்பட்ட பரிசுகள் என்னென்ன? முழு விவரம் இதோ
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட பைனல் நேற்று நடைபெற்ற நிலையில், அதில் யார் யாருக்கு என்னென்ன பரிசுகள் வழங்கப்பட்டது என்பதை பார்க்கலாம்.

Super Singer Season 11 Finals Prize Details
விஜய் தொலைக்காட்சி வழங்கிய பிரபல இசை நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர் – சீசன் 11’ இன் கிராண்ட் பினாலே, 01.02.2026 அன்று மதியம் 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை நேரலையாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான பாடகர்கள் பங்கேற்ற இந்த சீசனில், இறுதிப்போட்டிக்கு 7 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர்.
இறுதி மேடையில் சரண், ஆப்ரஹாம், நிக்கில், தர்ஷனா, மீனாட்சி, திஷாதனா, தவசீலினி ஆகியோர் தலா இரண்டு பாடல்களை பாடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியை வழக்கம்போல் மாகாபா ஆனந்த் – பிரியங்கா இணை தொகுத்து வழங்கினர். ஆரம்பம் முதல் தொடர்ந்து நடுவர்களாக இருந்து வந்த மிஷ்கின், கங்கை அமரன், உன்னிகிருஷ்ணன், சித்ரா, அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்டோர் கிராண்ட் பினாலேவிலும் கலந்து கொண்டனர்.
டைட்டில் வென்ற நிகில்
இந்த சீசனில் நிகில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இரண்டாவது இடம் சரண்ராஜ் மற்றும் திஷாதனா ஆகியோருக்கு கிடைத்தது. மூன்றாம் இடத்தை மீனாட்சி பிடித்திருந்தார். நான்காம் இடத்தில் தவசீலினியும், ஐந்தாம் இடம் ஆப்ரஹாமுக்கும் சென்றது. ஆறாம் இடத்தில் தர்ஷனா இருந்தார். இந்த சீசனில் வெற்றியாளருக்கு மட்டுமின்றி, இதில் இடம்பெற்ற 7 பைனலிஸ்டுகளுக்கு பரிசுகளை வாரி வழங்கி இருக்கிறார். அதை பார்க்கலாம்.
பரிசுகள் என்னென்ன?
சூப்பர் சிங்கர் சீசன் 11 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட நிகிலுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டது. இதையடுத்து இரண்டாம் இடத்தை பிடித்த சரண்ராஜ் மற்றும் திஷாதனாவுக்கு தலா 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த மீனாட்சிக்கு 5 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது. நான்கு மற்றும் ஐந்தாம் இடம்பிடித்த தவசீலினி மற்றும் ஆப்ரஹாமுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. ஆறாம் இடம்பிடித்த தர்ஷனாவுக்கு விலையுயர்ந்த செல்போன் பரிசாக வழங்கப்பட்டது.
சர்ச்சையில் சிக்கிய சூப்பர் சிங்கர்
இந்நிலையில், பரிசு வழங்கும் முறையில் வழக்கம்போல் விஜய் தொலைக்காட்சி இந்த முறையும் சர்ச்சைக்கு உள்ளானதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொடக்கம் முதல் இளையராஜா குரல் பாணியில் பாடல்கள் பாடி தனி அடையாளம் பெற்ற சரண்ராஜ், கிராண்ட் பினாலேவிலும் பாடலோடு ஒன்றிப்போய், பாத்திரமாகவே மாறி பாடிய விதம் அனைவரையும் கண்கலங்க வைத்தது. அவரை ஒரு பன்முகத் திறமை கொண்ட கலைஞர் என பாராட்டலாம் என்றே ரசிகர்கள் கூறினர்.
சரண்ராஜ் ஏமாற்றப்பட்டாரா?
டைட்டில் வின்னராக சரண்ராஜ் தான் தேர்வு செய்யப்படுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அந்த நம்பிக்கை நிறைவேறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. மேலும், யார் எத்தனை வாக்குகள் பெற்றனர் என்ற விவரத்தை இந்த சீசனிலும் அறிவிக்காமல் தவிர்த்தது, “அப்படியெனில் வாக்குப்பதிவு ஏன்?” என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. கடந்த சில சீசன்களாக தொடரும் இந்த மர்மம், ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

