100 இந்தியர்களை வேவு பார்த்த பெகாசஸ் ஸ்பைவேர்! அதிர வைக்கும் புதிய அப்டேட்!
இஸ்ரேலிய NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் 2019-ல் 51 நாடுகளில் 1,223 பேர் வாட்ஸ்அப் மூலம் குறிவைக்கப்பட்டனர். இதில் இந்தியாவில் 100 பேர் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

NSO Group spyware Pegasus
நீதிமன்ற ஆவணங்களின்படி, இஸ்ரேலிய நிறுவனமான NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர், 2019ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் வழியாக 51 நாடுகளில் 1,223 நபர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகபட்சமாக மெக்ஸிகோவைச் சேர்ந்த 456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 100 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
NSO Group spyware Pegasus
வாட்ஸ்அப் NSO குழுமத்திற்கு எதிராகத் தொடர்ந்து வழக்கை அடுத்து இந்த விவரங்கள் வெளிவந்தன. 2019 அக்டோபரில் வாட்ஸ்அப் வழக்கு தொடுத்தது. அதில், தனது தளத்தில் உள்ள ஒரு குறைபாட்டைப் பயன்படுத்தி உலகளவில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை உளவு பார்த்ததாக வாட்ஸ்அப் குற்றம் சாட்டியது. பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்கள் மூலம் ரகசியமாகக் கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
NSO Group spyware Pegasus
இதனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பஹ்ரைன் (82), மொராக்கோ (69), பாகிஸ்தான் (58), இந்தோனேசியா (54) மற்றும் இஸ்ரேல் (51) உள்ளிட்ட வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. ஸ்பெயின் (12), பிரான்ஸ் (7) மற்றும் அமெரிக்கா (1) போன்ற சில மேற்கத்திய நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இருப்பினும் அந்நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
NSO Group spyware Pegasus
என்.எஸ்.ஓ. நிறுவனம், பெகாசஸ் மென்பொருளை அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை செய்வதாகக் கூறினாலும், அரசாங்கங்கள் தங்கள் சொந்த எல்லைகளுக்கு வெளியே உள்ள நபர்களையும் இதன் மூலம் கண்காணிக்க முடியும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது உலகளாவிய கண்காணிப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது. இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து NSO குழுமம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
NSO Group spyware Pegasus
இந்தியாவில், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் மீது பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. 2021இல் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படும் நபர்களின் தொலைபேசிகளில் ஆய்வு செய்தது. ஆனால், எவருடைய போனிலும் பெகாசஸ் செயலி இருப்பதற்கான உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை. மத்திய அரசு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை சீல் வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் பொதுவில் வெளியிடப்படவில்லை.