ஓலா, உபேர் கதி அதோகதி தானா? களத்தில் இறங்கிய 'பாரத் டாக்ஸி'.. அமித் ஷா வைத்த செக்!"
Bharat Taxi மத்திய அமைச்சர் அமித் ஷா 'பாரத் டாக்ஸி' செயலியைத் தொடங்கி வைத்தார். கமிஷன் இல்லாத, டிரைவர்களே நடத்தும் இந்த புதிய சேவையின் சிறப்பம்சங்களை அறியலாம்.

Bharat Taxi
மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா, 'பாரத் டாக்ஸி' (Bharat Taxi) என்ற புதிய செயலியைத் தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான டாக்ஸி சேவையாகும். ஓலா (Ola), உபேர் (Uber) மற்றும் ரேபிடோ (Rapido) போன்ற தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லி-NCR மற்றும் குஜராத் மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சேவை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
ஓட்டுநர்களே முதலாளிகள்
பாரத் டாக்ஸி செயலியின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இது ஓட்டுநர்களால் (Drivers) நிர்வகிக்கப்படும் ஒரு கூட்டுறவு அமைப்பாகும். இதில் இணையும் ஓட்டுநர்கள் 'சாரதிகள்' (Sarathis) என்று அழைக்கப்படுவார்கள். தனியார் நிறுவனங்களைப் போல இவர்களிடமிருந்து அதிக கமிஷன் வசூலிக்கப்படாது. மாறாக, கிடைக்கும் லாபத்தில் ஓட்டுநர்களுக்கே பங்கு வழங்கப்படும். ஜூன் 6, 2025 அன்று அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம், டிசம்பர் மாதம் முதல் சோதனை ஓட்டத்தில் இருந்து வந்தது.
பொதுமக்களுக்கு என்ன லாபம்?
வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஏனென்றால், பாரத் டாக்ஸியில் 'சர்ஜ் பிரைசிங்' (Surge Pricing) கிடையாது. அதாவது, மழைக்காலங்களிலோ அல்லது அதிக டிமாண்ட் உள்ள நேரங்களிலோ தனியார் செயலிகள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவது போல, பாரத் டாக்ஸி செய்யாது. நியாயமான, நிலையான கட்டணத்தில் மக்கள் பயணிக்கலாம். கார், ஆட்டோ மற்றும் பைக் என அனைத்து வகையான வாகனங்களையும் இதில் புக் செய்ய முடியும்.
அசுர வளர்ச்சி மற்றும் வரவேற்பு
சோதனை ஓட்டம் தொடங்கிய சில மாதங்களிலேயே சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுநர்கள் இதில் இணைந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவு செய்துள்ளனர். டெல்லி மற்றும் குஜராத்தில் மட்டும் தினமும் 10,000-க்கும் மேற்பட்ட பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை ஓட்டுநர்களுக்கு ரூ.10 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் சலுகைகள்
இதில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு, ஓய்வூதிய சேமிப்பு மற்றும் சுகாதார நலன்கள் வழங்கப்படுகின்றன. மேலும், அவசர கால உதவி மற்றும் பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. "காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, துவாரகா முதல் காமாக்யா வரை அடுத்த மூன்று ஆண்டுகளில் பாரத் டாக்ஸி சேவையை விரிவுபடுத்துவதே எங்கள் இலக்கு" என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.
