- Home
- Tamil Nadu News
- TVK Vijay Cabinet Ready: தமிழக அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? வெளியான தகவல்.. யார் யாருக்கு வாய்ப்பு!
TVK Vijay Cabinet Ready: தமிழக அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? வெளியான தகவல்.. யார் யாருக்கு வாய்ப்பு!
TVK Vijay Cabinet: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பதவியேற்ற நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. காலியாக உள்ள 25-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு அமைச்சர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

10ம் தேதி முதல்வராக பதவியேற்ற விஜய்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில், முதல் முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து பெருபான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாத நிலையில் தவெக தலைவர் விஜய் திமுக கூட்டணி கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் காங்கிரஸ் ஆதரவு அளித்ததை அடுத்து முதல்வராக விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.

விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்கள் பதவியேற்பு
அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஏ.கே.செங்கோட்டையன், வெங்கட ரமணன், சிடிஆர்.நிர்மல்குமார், ராஜ் மோகன், பிரபு, கீர்த்தனா, அருண்ராஜ் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். பின்னர் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் முதல்வர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.
அனைத்து கோப்புகளும் கிடப்பில்
இந்நிலையில் தமிழக சட்டமன்ற விதிகளின்படி அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை இருக்க வேண்டும். ஆனால் 9 பேர் மட்டுமே பதவியேற்று கொண்டதால் வேளாண்மை, உயர்கல்வி, போக்குவரத்து, வருவாய் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மிக முக்கிய துறைகளுக்குத் தனி அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் அனைத்து கோப்புகளும் கிடப்பில் இருந்து வருகின்றன.
ஆளுநர் நாளை சென்னை வருகை
இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் விஜய் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தார். அதன்படி அமைச்சரவை விரிவாக்கம் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை சென்னை வருகிறார். இதில் தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள்
அதில், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் மற்றும் வேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 59 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுகிறது. அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறியிருந்த நிலையில் அவர்களையும் அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக பேச்சுவார்த்தையில் ஆதவ் அர்ஜுனா முதல் திரைமறைவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அதிமுக அணிக்கு வாய்ப்பு
மேலும் அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணியினரும் அமைச்சரவை இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தற்போதைய அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் எம்எல்ஏ மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில், கூடுதல் பெண் எம்எல்ஏக்கள் இடம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

