- Home
- Tamil Nadu News
- ரூ.1,020 கோடி ஊழல்.. வெட்கமாக இல்லையா? கே.என்.நேருவை பதவியில் இருந்து தூக்குங்க.. விஜய் ஆவேசம்!
ரூ.1,020 கோடி ஊழல்.. வெட்கமாக இல்லையா? கே.என்.நேருவை பதவியில் இருந்து தூக்குங்க.. விஜய் ஆவேசம்!
Vijay Slams DMK: ரூ.1,020 கோடி ஊழல் குற்றச்சாட்டில் உள்ள சிக்கியுள்ள அமைச்சர் கே.என்.நேருவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ரூ.1,020 கோடி ஊழல்
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதிலும், பணி நியமனம் செய்ததிலும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை இரண்டு முறை கடிதம் எழுதியும், தமிழக காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.
சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கே.என்.நேரு மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேருவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஊழலின் ஊற்றுக்கண் திமுக
இது தொடர்பாக விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கபட நாடகத் தி.மு.க. அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
தி.மு.க. அரசின் உச்சியைப் பிடித்த உயர்நீதிமன்றம்
2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் தி.மு.க. அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது. நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கே.என்.நேருவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
ஊழல் மலிந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத தி.மு.க. அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
திமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்
ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் தி.மு.க. அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த தி.மு.க. அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்'' என்று கூறியுள்ளார்.

