- Home
- Tamil Nadu News
- கமல்ஹாசன் பேசுவது புரியாததால் தான் கோவை மக்கள் அவரை வீட்டிற்கு அனுப்பினார்கள்.. வானதி சீனிவாசன்
கமல்ஹாசன் பேசுவது புரியாததால் தான் கோவை மக்கள் அவரை வீட்டிற்கு அனுப்பினார்கள்.. வானதி சீனிவாசன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் கனவுகள் நிறைவேற்றப்படுவதாக கூறி வரும் நிலையில், மக்களின் கனவு தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்புவது. அத நிச்சயம் நிறைவேறும் என கோவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மோடி முகாம்
கோவை சங்கனூர் பகுதியில் பா.ஜ.க சார்பில் மோடி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சாலையோர வியாபாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதாவது, ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று பா.ஜ.க நிர்வாகிகள் மக்களின் குறைகளை கேட்டறிய ஒரு புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலி மூலம் மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, அவை கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும்.
திராவிட மாடல் அரசு தோல்வி அடைந்துவிட்டது..
தான் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும். தி.மு.க தேர்தல் அறிக்கையின் நகலாக அ.தி.மு.க வாக்குறுதிகள் இருப்பதாக கூறுவது தவறு. அதனை தி.மு.க வாக்குறுதிகளின் இரண்டாம் பதிப்பு என கூறுவது சரியல்ல. தற்போதைய திராவிட மாடல் அரசு தோல்வியடைந்த மாடல் அரசு என்பதைக் மக்கள் உணர்ந்துள்ளார்கள். எப்போது இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவீர்கள் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கமல் பேசியது புரியவில்லை
முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என கனவில் இருக்கிறார். மக்களுக்கும், பா.ஜ.கவுக்கும் ஒரு கனவு உள்ளது, அது தற்போதைய ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது தான். கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் பேசியது தனக்கு புரியவில்லை, அவர் பேசியது புரியாததால் தான் கோவை மக்கள் ஏற்கனவே அவரை அரசியலில் இருந்து அனுப்பி விட்டார்கள்.
அண்ணாமலை சட்டமன்றத்திற்குள் வரவேண்டும்..
மேலும், ஊடக நண்பர்கள் எந்தவித அதிகாரத் தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக செய்தி சேகரிக்க வேண்டும் என்பதே பா.ஜ.க கனவு. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சட்டமன்றத்துக்குள் வர வேண்டும் என்பது கட்சியின் விருப்பம், அவரது தந்தையின் உடல்நிலை காரணமாக அவர் சில முடிவுகளை தெரிவித்துள்ள நிலையில், அதனை அரசியல் ரீதியாக பூதாகரமாக மாற்றுவது தவறு, இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

