- Home
- Tamil Nadu News
- கரூர் சம்பவம்! 29 மணி நேரத்துக்கு பின் நள்ளிரவில் ஆதவ் அர்ஜுனா போட்ட பரபரப்பு ட்வீட்!
கரூர் சம்பவம்! 29 மணி நேரத்துக்கு பின் நள்ளிரவில் ஆதவ் அர்ஜுனா போட்ட பரபரப்பு ட்வீட்!
கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, 29 மணி நேரம் தொடர்பில் இல்லாதிருந்த தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது ஆழ்ந்த துக்கத்தையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உருக்கமான ட்விட் செய்துள்ளார்.

தவெக தலைவர் நடிகர் விஜய்
தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்டத்தில் எதிர்பாராத விதமாக எற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கரூர் போலீசார், கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக சமூக ஊடகப் பொறுப்பாளர் நிர்மல் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தவெக தலைவர் ஆதவ் அர்ஜுனாவின் செல்போன்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியான நிலையில் 29 மணி நேரத்துக்கு பின் பரபரப்பு ட்வீட் செய்துள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா
இதுதொடர்பாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்:- என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன். இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்து வருகிறேன்.
கரூர் சம்பவம்
ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்தவன்
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை. இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன். துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என தெரிவித்துள்ளார்.