- Home
- Tamil Nadu News
- TN Politics: தவெக அமைச்சரவையில் விசிக! அப்படியே யூ டர்ன் அடித்த திருமாவளவன்! சுக்குநூறாக உடைந்த திமுக கூட்டணி!
TN Politics: தவெக அமைச்சரவையில் விசிக! அப்படியே யூ டர்ன் அடித்த திருமாவளவன்! சுக்குநூறாக உடைந்த திமுக கூட்டணி!
TN Politics: திமுக ஆட்சி என்றாலும் சரி, அதிமுக ஆட்சி என்றாலும் சரி விசிக, இடதுசாரிகள் அமைச்சரவையில் இடம்பெறுவது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஏன் கூடுதல் சீட்கள் கிடைப்பதும் குதிரை கொம்பு தான்.

தமிழக அரசியலில் அதிரடி மாற்றம்
தமிழக அரசியலில் இப்படியும் நடக்குமா? என பலரும் கனவு கண்ட விஷயங்கள் இப்போது நனவாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆம்.. இரு பெரும் திராவிட கட்சிகளை புரட்டியெடுத்து நடிகர் விஜய்யின் தவெக ஆட்சியில் அமர்ந்தது. தேர்தலுக்கு முன்னதாக தான் வாக்குறுதி அளித்தபடி தங்களுக்கு ஆதரவு கொடுத்த திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்து விட்டார் தவெக தலைவரும், முதல்வருமான விஜய். பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு தமிழகத்தில் கால்பதிக்க முடியாத காங்கிரஸ், விஜய்யின் கரிசனத்தால் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது.
தவெக அமைச்சரவையில் திமுக கூட்டணி கட்சிகள்
இதேபோல் திராவிட கட்சிகளிடம் ஒன்றிரண்டு, சீட்டுகளுக்காக அல்லாடிக் கொண்டிருந்த விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் தவெக அமைச்சரவையில் பங்கேற்க போவதாக அறிவித்து விட்டன. ‘தவெக அழைப்பின்பேரில் அமைச்சரவையில் பங்கேற்கிறோம்’ என்று இன்று மதியம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெரிவித்து இருந்தது. அதே வேளையில் விசிகவின் நிலைப்பாடு என்ன? என்பது மதில்மேல் பூனையாக இருந்து வந்தது.

தவெக அமைச்சரவையில் விசிக
விசிக தலைவர் திருமாவளவன் என்ன சொல்லப் போகிறார்? என எதிர்பார்ப்பு இருந்து நிலையில், தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறும் என்று திருமாவளவன் இன்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ''விஜய் ஆர்எஸ்எஸ் பிள்ளை என்பதில் உறுதியாக உள்ளோம். அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம்'' என்று கூறியிருந்த திருமாவளவன், இன்று அப்படியே யூ டர்ன் அடித்து விஜய் அமைச்சரவையில் ஐக்கியமாகியுள்ளார்.
திருமாவளவன் கொடுத்த விளக்கம்
''அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என தவெகவிடம் இருந்து தொடர்ச்சியான அழைப்புகள் இருந்தது. அதன்பேரில் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளோம். வன்னி அரசு அமைச்சரவையில் இடம் பெறுவார்'' என்று திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார். இதன்மூலம் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுவது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
திமுகவுக்கு பெரும் பின்னடைவு
ஏற்கெனவே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நேற்று, இன்று, நாளை என எப்போதும் திமுக கூட்டணியில் இருப்போம் என அடித்துக் கூறிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, முதல் ஆளாக தவெக அமைச்சரவையில் இடம்பெறும் முடிவை அறிவித்து விட்டது. இடதுசாரிகள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை என்றாலும் கிட்டத்தட்ட தவெகவில் ஐக்கியமாகி விட்டது என்றே சொல்லலாம். இப்படியாக திமுக வாக்கு வங்கிக்கு பலமாக இருந்த கூட்டணி கட்சிகள் வெளியேறியுள்ளது அறிவாலயத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவில் ஐக்கியமானதற்கு இதுதான் காரணம்
இந்த கட்சிகள் திமுகவை கைவிட்டதற்கு பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திமுக ஆட்சி என்றாலும் சரி, அதிமுக ஆட்சி என்றாலும் சரி விசிக, இடதுசாரிகள் அமைச்சரவையில் இடம்பெறுவது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஏன் கூடுதல் சீட்கள் கிடைப்பதும் குதிரை கொம்பு தான். ஆனால் இந்த கட்சிகளுக்கு வாழ்வு கொடுக்கும் விதமாக விஜய் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டுள்ளார்.
மேலும் தமிழக அரசியலில் மாபெரும் அதிசயமாக பட்டியல் சமூகத்தை சேர்ந்த 7 பேரை அமைச்சராக்கி சமூக நீதி அரசு என்பதை நிரூபித்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் அரசியல் தெரியாதவர் என்று கூறப்பட்ட விஜய், அதிமுகவை உடைத்து, திமுக கூட்டணிகளை பிரித்து மெளனமாக ராஜதந்திரம் செய்து விட்டார் எனறு தான் சொல்ல வேண்டும்.

