- Home
- Tamil Nadu News
- சூடு பிடிக்கும் மெட்ரோ திட்டம்! பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோவுக்கு ₹2,126 கோடி ஒதுக்கீடு!
சூடு பிடிக்கும் மெட்ரோ திட்டம்! பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோவுக்கு ₹2,126 கோடி ஒதுக்கீடு!
பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்கு ₹2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி - சுங்குவார் சத்திரம் வரை மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம்
பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக, முதல்கட்டமாக ₹2,126 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பூந்நமல்லி – பரந்தூர் மெட்ரோ
பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன. அதன்படி, பூந்தமல்லியில் இருந்து திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் விமான நிலையம் வரை 43.63 கி.மீ. தொலைவுக்கு 19 உயர்நிலை மெட்ரோ நிலையங்களுடன் மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம்
இந்த திட்டம் இரு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, பூந்தமல்லி - சுங்குவார் சத்திரம் வரையிலான 27.9 கி.மீ. தூரத்துக்கு, ₹8,779 கோடி மதிப்பில் மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில், திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக, தமிழக அரசு முதல்கட்டமாக ₹2,126 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
கிளம்பாக்கம் – விமான நிலையம் மெட்ரோ
முன்னதாக, சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக ₹1,964 கோடி நிதியை தமிழக அரசு புதன்கிழமை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.