- Home
- Tamil Nadu News
- தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்.. இந்த 5 பேரில் ஒருவர் தான் குற்றவாளியா?
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்.. இந்த 5 பேரில் ஒருவர் தான் குற்றவாளியா?
Thoothukudi School Student: பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தொண்டை, கழுத்து எலும்பு உடைந்து உள்ளதாக முதற்கட்ட தகவலானது தற்போது வெளியாகி உள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?

தூத்துக்குடி பள்ளி மாணவி கொலை
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த 10ம் தேதி மாலை இயற்கை உபாதைக்காக தனது வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாத நிலையில் மறுநாள் காலையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை பிடிக்க 10க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டும் இதுவரை குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி
இதனிடையே பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தொண்டை எலும்பு, கழுத்து எலும்பு உடைந்து உள்ளதாக முதற்கட்ட தகவலானது தற்போது வெளியாகி உள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய தடய அறிவியல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ மாற்றக்கோரி வழக்கு
இந்நிலையில் பள்ளி மாணவியின் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரீஸ்வரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
5 பேரிடம் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் 5 நபர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிக்கப்பட்டு மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் சம்பவ நேரத்தில், அந்த பகுதியில் பதிவான 1,600 செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தற்போது வரை 212 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
விசாரணை ஏப்ரல் 2 ஒத்திவைப்பு
இதனையடுத்து நீதிபதிகள், மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாக்குமூலங்களை வீடியோ, ஆடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவி காணவில்லை என்பது முக்கியமான புகார். அதில் காவல்துறையினர் அலட்சியத்துடன் செயல்படக்கூடாது எனவும் நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தை விசாரணை என்ற பெயரில் மிரட்டக்கூடாது. தற்போதைய விசாரணை அதிகாரியாக உள்ள குளத்தூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் சைரஸ் மாற்றம் செய்து விசாரணை அதிகாரியாக விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு விசாரிக்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

