- Home
- Tamil Nadu News
- தூத்துக்குடி 12ம் வகுப்பு பள்ளி மாணவி கொலை வழக்கு! பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.! கேட்டதும் கதறும் தந்தை!
தூத்துக்குடி 12ம் வகுப்பு பள்ளி மாணவி கொலை வழக்கு! பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.! கேட்டதும் கதறும் தந்தை!
Crime: 12ம் வகுப்பு மாணவி காட்டுப் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ். இவரது மனைவி காளீஸ்வரி. தம்பதியின் இளைய மகள் குறுக்கு சாலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி நேற்று மாலை வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து குற்றவாளியை உடனே கைது செய்யக்கோரி கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் வேடநத்தம் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 6க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மேலும் கூடுதலாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் சம்பவம் நடைபெற்ற கிராமம் மற்றும் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், குற்றவாளியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம். உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆறு மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கிறது. இந்நிலையில், திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தும் போராட்டத்தை உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் கைவிடுவதாக தெரியவில்லை. இதனிடையே குற்றவாளியை கைது செய்யாததால் மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறியதால் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பின அறையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தொண்டை எலும்பு, கழுத்து எலும்பு உடைந்து உள்ளதாக முதற்கட்ட தகவலானது தற்போது வெளியாகி உள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய திருநெல்வேலியில் உள்ள தடய அறிவியல் மையத்திற்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி மாணவியின் தந்தை சுப்புராஜ் கூறுகையில்: எனது பிள்ளையே போய்விட்டது எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம். எனக்கு குற்றவாளிகளை கண்டுபிடித்து கண் முன் நிறுத்த வேண்டும். விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனாவை பணி இடை நீக்கம் செய்தது எங்களுக்கு திருப்திகரமாக இல்லை உடனடியாக அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றார். மாணவி கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்களாகியும் போலீசார் ஒருவரையும் கைது செய்யப்படாதது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

