சென்னை மக்களே ரெடியா.. வீடு தேடி வரும் ரேஷன் பொருள்..! தேதி குறித்த தமிழக அரசு.!
தமிழகத்தில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு, வீட்டிற்கே ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகள்
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் முழு நேர நியாய விலை கடைகள் 26 ஆயிரத்து 502 செயல்பட்டு வருகிறது. பகுதிநேர கடைகள் 10 ஆயிரத்து 452 என மொத்த கடைகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 954ஆக கடைகள் இயங்கி வருகிறது. இந்த நியாய விலை கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் 2 கோடியே 29 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டையின் தன்மையை பொறுத்து உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவதி
மக்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளால் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் ரேஷன் பொருட்கள் வீட்டிலேயே கொண்டு விநியோகிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த வகையில் தமிழக சட்டப்பேரைவையில் வீட்டிற்கே சென்று சேரும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தாயுமானவர் திட்டம் தொடக்கம்
அதன்படி 65 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு வீட்டுக்கே வந்து ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் தாயுமானவர் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர். தாயுமானவர் திட்டத்தில் எப்போது வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தேதியும் தமிழக அரசு மாதந்தோறும் அறிவித்து வருகிறது. அந்த வகையில், 2026 பிப்ரவரி மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோக தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
வீட்டிற்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம்
இதுதொடர்பாக தமிழக அரசின் கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையில் எந்தெந்த இடங்கள்
பிப்ரவரி 2026 திங்களுக்கு 02.02.2026 மற்றும் 03.02.2026 ஆகிய 2 தினங்களில் சென்னையிலுள்ள அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
அனைத்து நியாய விலைக்கடைகள்
இந்த தகவலை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

