- Home
- Tamil Nadu News
- குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ஏப்ரல் 21ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்!
குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ஏப்ரல் 21ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்!
TASMAC: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மது விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி தேதியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாஸ்டாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை
இந்நிலையில் ஏப்ரல் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 04ம் தேதியும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்காது. எச்சரிக்கையை மீறி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21ம் தேதி முதல் மூடல்
இதுகுறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கிர்லோஷ் குமார் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், டாஸ்மாக் கடைகள், பார்கள் இணைந்த கடைகள் என உரிமம் பெற்ற அனைத்து பார்கள் ஆகியவை வரும் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதியும் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து விடுமுறை வருவதால் அதிர்ச்சி அடைந்துள்ள குடிமகன்கள் தற்போதை மதுபானத்தை வாங்கி வைக்க தொடங்கியுள்ளனர்.
மது விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்
ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மது விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 12 பீர் பாட்டில்கள் அல்லது 7.8 லிட்டர் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மது வகைகளை தனிநபருக்கு நாளொன்றுக்கு 4.5 லிட்டர் அளவு தான் விற்பனை செய்ய வேண்டும். அதேபோல் வெளிநாட்டு மது வகைகளையும் தனிநபருக்கு நாளொன்றுக்கு 4.5 லிட்டர் அளவு தான் விற்பனை செய்ய வேண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில் இதை அரசு எடுத்து நடத்தி வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.100 கோடிக்கு அளவுக்கு மதுபான விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வார விடுமுறை நாட்களில் வருமானம் இரட்டிப்பாகும்.

