- Home
- Tamil Nadu News
- பெண்களுக்கு ஜாக்பாட்.. தொழிலதிபராக சூப்பர் வாய்ப்பு.. ரூ.10,00,000 அள்ளிக்கொடுக்கும் அரசு..!
பெண்களுக்கு ஜாக்பாட்.. தொழிலதிபராக சூப்பர் வாய்ப்பு.. ரூ.10,00,000 அள்ளிக்கொடுக்கும் அரசு..!
தமிழக அரசு பெண்களைத் தொழில் அதிபர்களாக மாற்றும் நோக்கில் 'மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன். அதாவது ரூ.2 லட்சம் வரை மானியமும் வழங்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
தமிழக அரசு பெண்களின் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப் பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி, இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்கள்
மேலும் மகளிருக்கு தோழி விடுதிகள், விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பிற்காக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் 10 லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய தொழில் கடன் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்
இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சவுந்தரவள்ளி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் 2025-2026 மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களை தொழில் அதிபர்களாக மாற்றுவதே இந்த திட்டத்தின் முக்கிய இலக்காகும். குறிப்பாக கிராமப்புறங்களில் மூன்று லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், புதிய உற்பத்தித் தொழில்கள், சேவை சார்ந்த பணிகள், உணவுப் பதப்படுத்துதல், சில்லறை ஜவுளி விற்பனை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் (நேரடி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு நீங்கலாக) தொடங்க விரும்புவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
10 லட்சம் வரை வங்கிகள் மூலம் கடன்
விண்ணப்பிக்கும் பெண்களுக்குத் தேவையான தொழில் முனைவோர் பயிற்சிகளும் தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். தொழிலைத் தொடங்க அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், திட்ட மதிப்பீட்டில் இருபத்தைந்து சதவீதத் தொகை, அதாவது அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை அரசு மானியமாகவே வழங்குகிறது. இது பெண்களுக்கு நிதிச் சுமையைக் குறைத்து தொழிலில் வெற்றி பெறப் மிகப்பெரியாக உதவியாக இருக்கும்.
தொழில் இயந்திரங்களின் விலைப்பட்டியல்
இந்த வாய்ப்பைப் பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், 18 முதல் 55 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்த புதிய திட்டத்தில் இணைவதற்கு எந்தவிதமான அடிப்படைக் கல்வி தகுதியோ அல்லது குடும்ப ஆண்டு வருமானம் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. எனவே ஆர்வமுள்ள அனைத்துப் பெண்களும் முன்வரலாம். விண்ணப்பிப்பதற்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, செல்போன் எண், வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் நீங்கள் வாங்க உத்தேசித்துள்ள தொழில் இயந்திரங்களின் விலைப்பட்டியல் ஆகிய ஆவணங்கள் போதுமானவை. திருப்பத்தூர் மாவட்ட பெண்கள் அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ளவர்கள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.msmeonline.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல் தேவைப்படுவோர் திருப்பத்தூர் எழில் நகரில் அமைந்துள்ள மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரிலோ அல்லது 04179-299099 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

