தோழர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு..! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு
சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லக்கண்ணு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்லக்கண்ணுவுக்கு செயற்கை சுவாசம்
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லக்கண்ணு கடந்த சில தினங்களாக வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுத் திணறல், நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நல்லக்கண்ணுவை முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். கடந்த சுமார் 20 நாட்களாக அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் தற்போது அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இயற்கையுடன் போராடும் நல்லக்கண்ணு
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வீரபாண்டியன், “நல்லக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நல்லக்கண்ணு சிறு வயது முதலே போராட்ட குணம் கொண்டவர் தற்போது அவர் இயற்கையுடன் போராடி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் அவரிடம் இயற்கை மன்றாடிக் கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

