- Home
- Tamil Nadu News
- மாதந்தோறும் மின்கட்டணம்..! தேதி குறித்த தமிழக அரசு..! வெளியான அறிவிப்பு..! இல்லத்தரசிகள் ஹேப்பி!
மாதந்தோறும் மின்கட்டணம்..! தேதி குறித்த தமிழக அரசு..! வெளியான அறிவிப்பு..! இல்லத்தரசிகள் ஹேப்பி!
தமிழகத்தில் மாதந்தோறும் மின்கட்டண திட்டம் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TN Monthly Electricity Bill Plan with Smart Meters
தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கணக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு விவசாயிகள், வீடுகளுக்கு மின்கட்டண சலுகைகளை வழங்கி வரும் நிலையில், இந்த சலுகைகள் மூலம் முழுமையாக பயனடையும் வகையில் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்து மாதம்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
மாதந்தோறும் மின்கட்டண முறை
தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் திட்டமாக மாதந்தோறும் மின்கட்டண முறை அமலுக்கு கொண்டு வரப்படும் என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையிலும் கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. காலதாமதமானாலும் இனியாவது மாதந்தோறும் மின் கணக்கீடு முறையை கொண்டு வாருங்கள் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அமைச்சர் சிவசங்கர் சொன்ன குட்நியூஸ்
இந்நிலையில், தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தவுடன் மாதந்தோறும் மின்கட்டண திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிவசஙகர், ''தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் அமைக்கும் பணிகள் துரிதமாக முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் மாதந்தோறும் மின்கணக்கீடு முறை நடைமுறைக்கு கொண்டு வரப்படும். ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கப்பட்டால் மாதந்தோறும் மின்கட்டணம் மிகவும் எளிமையாக இருக்கும்'' என்று தெரிவித்தார்.
மின் கட்டணம் மீண்டும் உயருகிறதா?
தமிழ்நாட்டில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக வீட்டு பயன்பாடுக்கு 2024 ஜூலை மாதம் 4.8 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடன், உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நிகழாண்டு 3 சதவீதம் முதல் 3.16 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்த போவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாயின.
இதனால் மீண்டும் மின் கட்டணம் உயருமா? என பொதுமக்கள் அச்சத்தில் இருந்த நிலையில், 'இது தொடர்பாக போலி செய்திகள் உலா வருகின்றன. மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை' என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.