- Home
- Tamil Nadu News
- பள்ளியில் மாணவர் சேர்க்கை எப்போது.! எத்தனை வயதில் சேரலாம்.? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பள்ளியில் மாணவர் சேர்க்கை எப்போது.! எத்தனை வயதில் சேரலாம்.? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழக அரசுப் பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் முதல் தொடங்கும். 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை சேர்க்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளியில் மாணவர் சேர்க்கை எப்போது.! எத்தனை வயதில் சேரலாம்.?
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் அதிக மதிப்பெண்களை குவித்து வருகிறார்கள். மேலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு இலவச திட்டங்களையும் செயல்படுத்து வருகிறது. இந்த நிலையில் 2025-2026 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில் நுட்ப கணிணி ஆய்வகங்கள் அதற்குத் தேவையான இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.
பள்ளியில் அரசின் திட்டங்கள்
மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினியும் (TAB) வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் இத்தகைய கற்றல் வாய்ப்புகள், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு உதவித் தொகைகள் குறித்த விழிப்புணர்வினை அனைத்து பொது மக்கள் மற்றும் அனைத்து பள்ளி வயது குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் முதல் மாணவர்கள் சேர்க்கை
5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகளை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை செய்வதற்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆணைகள் வெளியிடப்பட்டது. வழிகாட்டுதல்களை கவனமுடன் பின்பற்றி 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் 01032025 முதல் தொடங்கிட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
5 வயது முதல் மாணவர்கள் சேர்க்கை
தமிழ்நாட்டில் பெரும்பான்மையான அரசுப் பள்ளிகள் ஊரகப் பகுதிகளில் தான் அமைந்துள்ளன. ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் 3 முதல் 5 வயதுடைய குழந்தைகள் பள்ளி முன்பருவக் கல்வியைக் கற்று வருகின்றனர். இம்மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5+ வயதுடைய குழந்தைகளை அந்தந்தக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் (Habitation and Catchment Area) சேர்க்கை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் சேர்க்கையை சிறப்பான முறையில் செய்திடுக
மேற்படி, அங்கன்வாடி மையங்களில் கல்வி பயிலும் 5+ வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முழுமையாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபாய் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மற்றும் சுயஆர்வலர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கி மாணவர் சேர்க்கைப் பணிகளை சிறந்த முறையில் நடத்திட வேண்டும்
நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
மேலும் அங்கன்வாடி மையங்கள் அல்லாது வேறு பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் குழந்தைகள் மற்றும் ஒன்றாம் வகுப்பு அல்லாத பிற வகுப்புகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் மாணவர்களுக்கு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கைக்கான இடங்களை பள்ளிகள் வழங்க உரிய அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவயர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
எமிஸ் மாணவர்கள் சேர்க்கை பதிவு செய்திடுக
மேலும் அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை செய்திடவும், 2025-26ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை கணிசமான அளவில் உயர்த்திடவும் சார்நிலை அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை ஆகும் மாணவர் விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.