ராமேஸ்வரம் - காசி இலவச ஆன்மிக சுற்றுலா.! அறநிலையத்துறையின் அசத்தல் தகவல்
தமிழக அரசு மூத்த குடிமக்களுக்காக காசி யாத்திரையை அரசு மானியத்துடன் ஏற்பாடு செய்துள்ளது. இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு 60 மூத்த குடிமக்கள் ஆன்மிகப் பயணம் தொடங்கினர், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டன.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஒன்றன் பின ஒன்றாக திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த இரண்டாண்டுகளில் அறுபடைவீடுகளுக்கு ஆன்மிகப் பயணமாக 2022 மூத்த குடிமக்கள் அரசு மானியம் ரூ.2.14 கோடி செலவில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
ஆடி மாதங்களில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு 1.003 மூத்த குடிமக்களும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கு 1,008 மூத்த குடிமக்களும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இவற்றிற்காக தலா ரூ.25 இலட்சம் அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அறநிலையத்துறை திட்டங்கள்
மேலும், ஆன்மிகப் பயணமாக மானசரோவர் புனித தலத்திற்கு சென்று வந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் ரூ.40 ஆயிரத்தை ரூ.50 ஆயிரமாகவும், முக்திநாத் புனித தலத்திற்கு சென்று வந்தவர்களுக்கு அரசு மானியம் ரூ.10 ஆயிரத்தை ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இதே போல 2022-2023 ஆம் நிதியாண்டில் முதன்முதலாக இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு 200 மூத்த குடிமக்களையும். 2023-2024 ஆம் நிதியாண்டில் 300 மூத்த குடிமக்களையும் அரசு மானியத்தில் அனுப்பி வைத்தார்கள். இந்த நிதியாண்டில் 420 மூத்த குடிமக்கள் காசிக்கு அழைத்து செல்லப்படுவர் என அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக இன்றைய தினம் 60 மூத்த குடிமக்கள் ரயில் மூலமாக ஆன்மிகப் பயணம் புறப்பட்டனர்.
இலவச ஆன்மிக பயணம்
இந்த பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு உதவியாக ஒரு உதவி ஆணையர். மூன்று திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உடன் செல்கின்றனர். இதற்காக அரசு நிதி சுமார் 2 கோடி 30 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இன்று புறப்பட்ட இராமேசுவரம்-காசி ஆன்மிகப் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு போர்வை, துண்டு, சோப்பு என பயணத்திற்கு தேவையான 15 வகையான பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆன்மிகப் பயணம் நிறைவடைந்து அவர்கள் தங்களது இல்லங்களுக்கு திரும்பும் வரை அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.
ராமேஸ்வரம் - காசி பயணம்
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சரை பொறுத்தளவில் மும்மொழி கொள்கையை திணிக்க வருகின்ற போது அவர் எந்த எதிர்ப்புக்கும் அடங்க மாட்டார். எதிர்ப்புக்கு அடங்காத தலைவர் தான் எங்களுடைய தலைவர் ஆவார். இந்த ஆட்சியின் மீதும் மக்களின் மீதும் விருப்பத்திற்கு மாறாக எதை திணித்தாலும் தமிழகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு தொண்டனும் அதற்கு எதிர்ப்பாக வெகுண்டு எழுவான் என கூறினார்.
பாஜகவிற்கு மரண அடி கிடைக்கும்
ஆகவே அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லாத சூழ்நிலையில் கோயபல்ஸ் தத்துவத்தின்படி, ஒரே பிரச்சனையை எடுத்துக் கொண்டிருக்கும் அண்ணாமலையின் செயல்பாடுகளை மக்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். 2026 தேர்தலில் பெறப்போகும் அடி பாரதிய ஜனதாவிற்கு தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் மரண அடியாகத்தான் இருக்கும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.