- Home
- Tamil Nadu News
- அடி தூள்! வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! தேதி குறித்த தமிழ்நாடு அரசு! முழு விவரம் இதோ!
அடி தூள்! வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! தேதி குறித்த தமிழ்நாடு அரசு! முழு விவரம் இதோ!
தமிழ்நாடு அரசு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்களை பார்க்கலாம்.

Tamilnadu Doorstep Ration Delivery Scheme
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளால் ரேஷன் பொருட்களை நேரில் சென்று வாங்க முடியவில்லை. இதை கவனத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.
இனி ரேஷன் பொருள் வீடு தேடி வரும்
இந்நிலையில், வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 12ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என அறிவிக்கபப்ட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு பின்வருமாறு:
அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 12.8.2025 அன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
மூத்த முடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்
மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வீட்டுக்கே சென்று ஊழியர்கள் ரேஷன் பொருள் வழங்குவார்கள்
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.
மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் உண்டா?
70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம், நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.
முதல்வர் ஸ்டாலின் 12.8.2025 அன்று இத்திட்டத்தை சென்னையில் தொடங்கிவைக்கும் வேளையில், மற்ற மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்கள்.