- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் 3 நாளில் 42 கோடி பறிமுதல்.. மதுபானம் முதல் தங்கம் வரை.. மிரண்டு போன அதிகாரிகள்!
தமிழகத்தில் 3 நாளில் 42 கோடி பறிமுதல்.. மதுபானம் முதல் தங்கம் வரை.. மிரண்டு போன அதிகாரிகள்!
Tamil Nadu Election 2026: வாக்காளர்களுக்கு பணம், பொருள் விநியோகம் செயவதை தடுக்க தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. வாக்காளர்களுக்கு பணம், பொருள் விநியோகம் செயவதை தடுக்க தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
3 நாளில் 42.65 கோடி பறிமுதல்
அதாவது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2160 பறக்கும் படைகள், 2160 நிலை கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 3 நாளில் 42.65 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம், தங்கம், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ' தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் கணிசமான அளவு பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள், மதுபானம்
18 மார்ச் 2026 அன்றைய நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ₹42.65 கோடி ஆகும். இதில் ரொக்கம் ரூ.2.37 கோடி ஆகும். மதுபானம் ₹0.18 கோடி ஆகும். மேலும் போதைப்பொருட்கள் ₹2.88 கோடி, விலைமதிப்பற்ற உலோகங்கள் ₹16.42 கோடி, இலவசங்கள் / பிற பொருட்கள் ₹20.80 கோடி என மொத்தம் ₹42.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.

