- Home
- Tamil Nadu News
- துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்! உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்! உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Duraimurugan Disproportionate Assets Case: அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு
தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது, வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது கடந்த 2006-11 திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக துரைமுருகன் பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்து குவித்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
சென்னை உயர் நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும் விடுவித்த வேலூர் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்தது. இந்த வழக்கை தினமும் என்ற அடிப்படையில் மீண்டும் மறுவிசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் முறையீடு
மேலும் இந்த வழக்கை வேலூருக்கு மாற்ற வேண்டும் என்று துரைமுருகன் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தன்னை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து துரைமுருகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாஷி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது துரைமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் வில்சன் ஆகியோர் வாதிட்டனர்.
துரைமுருகன்
இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. மேலும், அமைச்சர் என்ற முறையில் துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் ஆளுநரிடம்தான் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், சட்டப்பேரவை தலைவரிடம் அனுமதி பெற்றுள்ளனர். இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் வழக்கில் இருந்து இருவரையும் வேலூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. உயர் நீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதையடுத்து, துரைமுருகன், சாந்தகுமாரிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.