- Home
- Tamil Nadu News
- 300 சவரன் போட்டும் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா வழக்கில் திடீர் திருப்பம்! போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!
300 சவரன் போட்டும் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா வழக்கில் திடீர் திருப்பம்! போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!
திருப்பூரில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் வரதட்சணை கொடுமை நடக்கவில்லை என்று வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை அளித்துள்ள நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை போதுமான தகவல்களுடன் இல்லை என நீதிபதி அதிருப்தி.

ரிதன்யா
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யா (27). இவருக்கும் திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த கவின் குமார்(28) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பெண்ணின் வீட்டில் 300 சவரன் நகை, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் மற்றும் 2 1/2 கோடி ரூபாய் செலவு ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது.
வரதட்சணை கொடுமை
திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ரிதன்யா ஆடியோ அனுப்பியிருந்தார். இந்த வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் மூவரின் ஜாமீன் மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
சென்னை உயர்நீதிமன்றம்
இதையடுத்து 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன்: ரிதன்யாவுக்கும், கவின்குமாருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இரு தரப்பும் பொருளாதாரத்தில் சம அளவில் இருப்பதால் தங்களுக்கு வரதட்சணை எதுவும் கேட்கவில்லை. மருத்துவ அறிக்கையில் மட்டுமல்ல, போலீஸ் விசாரணையிலும் மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரம் இல்லை என்று தெரியவந்துள்ளது. தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என ரிதன்யா கூறியதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே ரிதன்யா தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறினார். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
ஜாமீன் வழங்க எதிர்ப்பு
ரிதன்யாவின் தந்தை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம்: கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் ரிதன்யாவுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை செய்துள்ளனர். கொடுமை தொடர்ந்ததால், மனவேதனையில் தற்கொலை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜாமீன் வழங்கினால் அவர்கள் சாட்சிகளை கலைப்பார்கள். ஆகையால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.
பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி
அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ்: ரிதன்யா தற்கொலை வழக்கில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர் விசாரணை நடத்தி, வரதட்சணை கொடுமை நடக்கவில்லை என்று அறிக்கை அளித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் ரிதன்யா உடல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்று முதல் கட்டமாக தெரியவந்துள்ளது. தடய அறிவியல் அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் 2 வாரத்துக்குள் வந்துவிடும் என்றார்.
ரிதன்யாவின் ஆடியோ பதிவு
பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, அறிக்கை போதுமான தகவல்களுடன் முழுமையாக இல்லை என அதிருப்தி தெரிவித்தார். மேலும், ரிதன்யா உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையே? ரிதன்யாவின் ஆடியோ பதிவு என்ன ஆனது? அந்த ஆடியோ அவரது போனில் தான் ரெக்கார்ட் செய்யப்பட்டதா? விவரம் எதுவும் இல்லாமல் அரைகுறையாக உள்ளது என்று கருத்து தெரிவித்தார். பின்னர், தடய அறிவியல் சோதனை அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.