- Home
- Tamil Nadu News
- இல்லத்தரசிகளுக்கு குஷி.! 5ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் போடும் அரசு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
இல்லத்தரசிகளுக்கு குஷி.! 5ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் போடும் அரசு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிருக்கான திட்டத்தை அறிவித்துள்ளது. அந்த வகையில் ரூ.5,000 வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க செப்டம்பர் 1ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான தமிழக அரசின் திட்டங்கள்
பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் சொந்தமாக முன்னேறும் வகையில் அரசானது பல்வேறு கடன் உதவி திட்டங்கள், மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம் திட்டம் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர். கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலர் மாவு இயந்திரம் வாங்க 5ஆயிரம் மானியம்
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த வகையில் 2025-2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 10,000/- அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது,
மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5,000/-மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
திட்டத்தில் பயன்பெற தகுதிகள்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். (பிறப்பிடச் சான்று). வயது வரம்பு 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று மற்றும் திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள்,
ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாச்சியரிடம் பெறுதல் வேண்டும் ) போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ. 1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (வருமானச் சான்று வட்டாச்சியிரிடமிருந்து பெறுதல் வேண்டும்)
விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது.?
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர் சென்னை மாவட்ட ஆட்சியரகம், சிங்கார வேலனார் மாளிகை. 8 வது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவகத்தில் 01.09.2025-ற்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுகால் தெரிவு செய்யப்படுவர். இதர விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.