தொடர் அரசு விடுமுறை.! மாணவர்களுக்கு குட் நியூஸ்- போக்குவரத்து துறை அறிவிப்பு
பக்ரீத், முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. சென்னை, கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

பக்ரீத் மற்றும் வார விடுமுறை
சொந்த ஊரில் படித்த படிப்பிற்கும், நல்ல ஊதியமும் கிடைக்காத காரணத்தால் ஏராளமானோர் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு வேலைக்காக செல்கின்றனர். அந்த வகையில் விஷேச நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் மட்டுமே சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவார்கள்.
இந்த நிலையில் பக்ரீத், முகூர்த்தம், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்ல பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
நாளை (05/06/2025) நாளை மறுதினம் (06/06/2025) முகூர்த்தம் 07/06/2025 (சனிக்கிழமை), மற்றும் 08/06/2025 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் சிறப்பு பேருந்து
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி. ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 06/06/2025 வெள்ளிக்கிழமை அன்று 100 பேருந்துகளும், 07/06/2025 சனிக் கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந் திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி. நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 06/06/2025 (வெள்ளிக் கிழமை) அன்று 520 பேருந்துகளும் 07/06/2025 (சனிக் கிழமை) 550 பேருந்துகளும்
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மாதாவரத்திலிருந்து 06/06/2025 மற்றும் 07/06/2025 ஆகிய நாட்களில் தலா 24 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை முடிவடைந்து ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து பயணம் செய்திடுக
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 14,413 பயணிகளும் சனிக்கிழமை அன்று 5,990 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 15,680 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.