கெஸ்ட் ரோல் அரசியல்வாதி சைதை துரைசாமி! அதிமுக இப்படி கொதிக்க இதுதான் காரணமா?
அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் அறிக்கை குறித்து அதிமுக ஐடி விங் விமர்சனம். எம்.ஜி.ஆர் அணுகுமுறையை பின்பற்றவும், பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் அவர் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆரின் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, அதிமுக விவகாரம் தொடர்பாக பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எம்.ஜி.ஆரின் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். எம்.ஜி.ஆர் மத்திய அரசோடு எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்கமாட்டார். இந்த அணுகுமுறைகளைக் கடைபிடித்தால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லலாம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுக ஐடி விங் சார்பில் சைதை துரைசாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
அதிமுக ஐடிவிங் பதிலடி
இதுதொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில்: அஇஅதிமுக-வில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தொண்டர்கள் தான். "நான் மட்டும் தான் எம்ஜிஆர் தொண்டன்" என்று சொல்லிக்கொண்டு பாடம் எடுக்கும் இவர், என்றைக்காவது இந்த இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா? கழகப்பணி எனும் கடலில் எதிர்நீச்சல் அடித்து தேர்தல் என்னும் கரை சேர்பவன் தான் அண்ணா திமுக தொண்டன்.
கெஸ்ட் ரோல் அரசியல்வாதி
ஙகழகப்பணி பக்கமே தலை வைக்காமல், தேர்தல் மேகங்கள் சூழும் சமயத்தில் "நானும் அரசியலில் இருக்கிறேன்" என்று தன் இருப்பைக் காட்டிக்கொள்ள மட்டுமே உள்ள சைதை துரைசாமி போன்றோருக்கு, இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி என்ன தெரியும்? இன்றும் பூத் கமிட்டி வரை கழகப்பணிகளில் தொண்டர்கள் தங்களை உற்சாகமாக ஈடுபடுத்தி வருவதை சைதை துரைசாமி போன்ற Guest Role அரசியல்வாதிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த இது தான் சான்ஸ்.! இபிஎஸ்க்கு ஐடியா கொடுத்த சைதை துரைசாமி!
தலைமைக் கழகத்தை சூறையாடிய துரோகி
இந்த இயக்கத்தால் வந்தது தான் தன் வாழ்வு என்பதை உணர்ந்திருப்பார் எனில், இப்படி அவர் பேசமாட்டார். "அஇஅதிமுக-வில் இருந்திருக்காவிட்டால் தான் யார்?" என்ற கேள்வியை சைதை துரைசாமி கண்ணாடியைப் பார்த்து கேட்டுக்கொள்ளட்டும். இந்த இயக்கத்தை அழிக்க நினைத்த, நம் இதயதெய்வங்கள் இன்றும் குடியிருக்கும் கோயிலாக நாம் கருதும் நம் தலைமைக் கழகத்தை சூறையாடிய துரோகியின் பெயரை அஇஅதிமுக பெயர் கொண்ட, இரட்டை இலை சின்னம் கொண்ட Letter Head-ல் குறிப்பிடதற்கே சைதை துரைசாமி வெட்கப்பட வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி
இப்போதும் சரி, எப்போதும் சரி- இந்த இயக்கத்தின் பாதை நேரானது! நம் இலக்கு முடிவானது. புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அம்மாவின் நூற்றாண்டு கனவு நோக்கி, தமிழ்நாட்டு நலனுக்கான தனிப்பெரும் இயக்கமாக அ.இ.அ.தி.மு.க. என்றும் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.