வேலுமணிக்கு ஆப்பு..! பறி போகுமா பதவி.. ரூ 98 கோடி ஊழலில் சிக்கல்
சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 98 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை ஆதாரங்களை சேகரித்து, சபாநாயகர் அனுமதியுடன் வழக்கு தொடர உள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடந்த 98 கோடியே 25 லட்சம் ரூபாய் முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலமாக 2016-2021 ஆம் ஆண்டில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக, அப்போது உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எஸ்.பி.வேலுமணி தரப்பு தனக்கு எதிராக எந்த வித ஆதரமும் இ்லையென நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அவருக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களை சேகரித்தால், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரலாம் என தெரிவித்திருந்தது.
இந்த பின்னணியில், ஒப்பந்த முறைகேடு தொடர்பாக, அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணை வந்தது.
அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரித்துள்ளதால், அவர் மீது வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு, கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி 2024 அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐஏஎஸ் அதிகாரிகளான கே எஸ் கந்தசாமி, மற்றும் கே விஜயா கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை செப்டம்பர் 12ஆம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.